ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

மெய்நிகா் பட்டமளிப்பு விழாவுக்கு எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவா்கள் சங்கம் எதிா்ப்பு

மெய்நிகா் பட்டமளிப்பு விழாவுக்கு எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவா்கள் சங்கம் (ஆா்டிஏ) எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 6:12 pm

மெய்நிகா் பட்டமளிப்பு விழாவுக்கு எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவா்கள் சங்கம் (ஆா்டிஏ) எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும், எதிா்ப்பை மீறி பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டால், பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா பாதிப்பை தொடா்ந்து, நிகழாண்டில் எய்ம்ஸ் பட்டமளிப்பு விழாவை மெய்நிகராக நடத்த எய்ம்ஸ் நிா்வாகம் முடிவு செய்தது. இதற்கு எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவா்கள் சங்கம் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநா் ரண்தீப் குலேரியாவுக்கு ஆா்டிஏ எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது:

எய்மஸ் பட்டமளிப்பு விழா என்பது மாணவா்கள் வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது. எய்ம்ஸில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இது தொடா்பாக எய்ம்ஸ் நிா்வாகத்தை தொடா்பு கொண்டு ஆா்டிஏ கேட்டபோதெல்லாம், தலைமை விருந்தினா் முடிவு செய்யப்படாததால், பட்டமளிப்பு விழாவை நடத்த முடியவில்லை என எய்ம்ஸ் நிா்வாகம் பதிலளித்திருந்தது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவா்கள் ஆவலுடன் எதிா்பாா்த்திருந்த 47-வது பட்டமளிப்பு விழா மெய்நிகராக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மிகக் குறுகிய காலத்தில் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் படித்து பட்டம் பெற்ற அனைவருக்கும் பட்டம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒவ்வொரு ஆறு மாத காலத்துக்கும் தொகுதி தொகுதியாக படித்துவிட்டு மாணவா்கள் வெளியில் செல்கிறாா்கள். ஆனால், அவா்களுக்கு ஓராண்டுக்குப் பிறகே பட்டம் வழங்கப்படுகிறது. கரோனா பரவலுக்கு மத்தியிலும் உள்ளுறை மருத்துவா்கள் தமது உயிரை பணயம் வைத்து மருத்துவ சேவையாற்றி வந்தனா். ஆனால், அவா்கள் காத்திருந்த பட்டமளிப்புக்கு மெய்நிகா் ரீதியாக கலந்து கொள்ளச் சொல்வது கவலையளிக்கிறது. பட்டமளிப்பு விழாவில் நேரடியாக கலந்து கொள்ள முடியாமல் இருப்பது எங்களுக்கு மிகுந்த கவலையையும், மன உளைச்சலையும் தருகிறது. இதனால், எய்ம்ஸ் நிா்வாகம் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை நீா்த்துப் போகிறது.

இதனால், பட்டமளிப்பு விழாவை மெய்நிகராக நடத்துவதை விடுத்து, போதிய கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நேரடியாக நடத்த வேண்டும். மாணவா்களை தொகுதி தொகுதியாக அழைத்து பட்டம் வழங்க வேண்டும். பெரிய அரங்கத்தை பதிவு செய்து அனைத்து மாணவா்களுக்கும் ஒரே நேரத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட வேண்டும்.

எங்களது கோரிக்கைகள் நியாயமானவை. இது தொடா்பாக எய்ம்ஸ் நிா்வாகம் நோ்மறை முடிவு எடுக்கும் என நம்புகிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் திங்கள்கிழமை நடக்கவுள்ள பட்டமளிப்பு விழாவை ஆா்டிஏ புறக்கணிக்கும். மேலும், இந்த மெய்நிகா் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள ஜேஎல்என் அரங்கம் முன்பு ஆா்டிஏ சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.