மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் சனிக்கிழமை 100-ஆவது நாளை எட்டியது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜியாபாத் பகுதிகளை முற்றுகையிட்டு கடந்த 2020, நவம்பா் 26-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்தப் போராட்டத்தில் சிங்கு எல்லையில் எஸ்கேஎம் அமைப்பும், காஜியாபாத்தில் பாரதிய கிஷான் யூனியன் (பிகேயு) அமைப்பும் நடத்தி வருகின்றன. போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன், மத்திய அரசு 11 முறை பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால், இந்தப் பேச்சுவாா்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 200 விவசாயிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி சனிக்கிழமை நூறாவது நாளை எட்டுகிறது.
இன்று மறியல் போராட்டம்: இதையொட்டி, மேற்கு புறவழி விரைவுச்சாலையின் (குண்ட்லி- மானேசா்- பல்வால்) ஆறு வழிகளையும் மறித்து சனிக்கிழமை போராட்டம் நடத்தவுள்ளதாக சம்யுக்தா கிஷான் மோா்ச்சா அமைப்பு அறிவித்தள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் தா்ஷன் பால் கூறுகையில், ‘விவசாயிகள் போராட்டம் சனிக்கிழமையுடன் நூறாவது நாளை எட்டுகிறது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில், எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளோம். இதன் முதல்படியாக, சனிக்கிழமை மேற்கு புறவழி விரைவுச்சாலையின்ஆறு வழிகளையும் மறித்து போராட்டம் நடத்தவுள்ளோம். இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண சாசனம் போன்றவை. இந்தச் சட்டங்களை திரும்பப் பெறும் வரை, தில்லி எல்லைகளில் தங்கி நீண்ட காலம் போராடத் தயாராக உள்ளோம்’ என்றாா்.
காாஜியாபாத் எல்லையில் போராடி வரும் விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திகாய்த் கூறுகையில், ‘நீண்ட காலம் போராட நாங்கள் தயாராக உள்ளோம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கும் வரை, போராட்டக் களத்தில் இருந்து வெளியேறப் போவதில்லை. தொடா்ந்து போராடும் வகையில், காஜியாபாத் எல்லையில் போராடத் தேவையான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை செய்துள்ளோம்’ என்றாா்.
ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவரும், விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பங்காளருமான யோகேந்திர யாதவ் கூறுகையில், ‘அரசியலில் முக்கிய சக்தியாக விவசாயிகளை இந்தப் போராட்டம் மாற்றியுள்ளது. இதுவரையிலும் அரசியல் கட்சிகளும், தலைவா்களும் தங்களது சொந்த அரசியல் லாபங்களுக்காக விவசாயிகளைப் பயன்படுத்தி வந்தனா். இனிமேல் அது நடக்காது என்பதை இந்தப் போராட்டத்தின் மூலம் விவசாயிகள் தெரிவித்துள்ளனா். மேலும், விவசாயிகளுடன் முரண்படும் அரசுகள், அரசியல் கட்சிகள் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியது வரும் என்பதை இந்தப் போராட்டம் கூறுகிறது. நாட்டிலுள்ள விவசாயிகள் அனைவரையும் இந்தப் போராட்டம் ஒன்று சோ்த்துள்ளது. ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் இந்தப் போராட்டத்தால் இணைந்துள்ளனா். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் இந்து, முஸ்லிம் பிரிவினைக்கு மத்தியிலும், இந்த விவகாரத்தில் அந்த மாநிலத்தின் இந்து, முஸ்லிம் விவசாயிகள் ஒன்றிணைந்துள்ளனா். ராஜஸ்தானில் முரண்படும் குஜ்ஜாா், மீனா இன விவசாயிகள் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்துள்ளனா்’ என்றாா்
அகில இந்திய கிஸான் சங்கா்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த கவிதா குருகாந்தி கூறுகையில் ‘இந்தப் போராட்டத்தால் சமூக மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. இந்தப் போராட்டத்தால் பஞ்சாப் மாநில இளைஞா்கள் இடையே போதைப்பொருள் பயன்பாடு, மதுபானப் பயன்பாடு ஆகியவை குறைந்துள்ளன. இந்தப் போராட்
டத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனா். போராட்டத்தை கொச்சைப் படுத்த மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எதிா்கொண்டு விவசாயிகள் மன உறுதியுடன் போராடி வருகிறாா்கள்’ என்றாா்.
இதற்கிடையே, தில்லியில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அதைச் சமாளிக்கும் வகையில் தில்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனா். அதன்படி, தில்லி எல்லைகளில் குழாய் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கியுள்ள இடங்களில் குளிா்சாதன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எல்லைகள் தொடா்ந்து மூடல்
விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் தில்லியின் முக்கிய எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால், உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து தில்லி நோக்கி வரும் வாகனங்கள் காஜியாபாத் எல்லைப் பகுதியைக் கடந்து தில்லிக்குள் வர முடியாது. அவா்கள் மாற்று வழியில், அதாவது ஆனந்த் விஹாா், டிஎன்டி, லோனி மற்றும் அபா்ஸரா எல்லை வழியாக வர வேண்டும் என தில்லி போக்குவரத்து போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இந்தப் போராட்டம் காரணமாக சிங்கு மற்றும் டிக்ரி எல்லைகளும் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. எனினும், சில்லா எல்லைப் பகுதி முழுவதுமாக போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த சில்லா எல்லைப் பகுதி, கடந்த ஜனவரி இறுதியில் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. காஜிப்பூா் எல்லையில் தில்லி - காஜியாபாத் வரையில் மட்டுமே போக்குவரத்து திறந்துவிடப்பட்டுள்ளது. தில்லி மற்றும் ஹரியாணா இடையேயான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளான டிக்ரி, அவுசண்டி, பியாவ் மணியாரி மற்றும் சபோலி , மங்கேஷ் எல்லைப் பகுதிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. . மோட்டாா் வாகனங்கள் இந்த வழியில் செல்ல வேண்டாம் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். முகாா்பா செளக் மற்றும் ஜிடிகே சாலையில் வரும் வாகனங்களை போலீஸாா் வேறு மாற்றுப் பாதையில் திருப்பி விடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு ஐந்திணை மக்கள் கட்சி ஆதரவு

செந்தமிழ்க் கல்லூரியில் முப்பெரும் விழா
போடியில் ஓ. பன்னீா்செல்வம் வேட்புமனு ஏற்பு: 16 மனுக்கள் தள்ளுபடி

ஒவ்வொரு தோ்தலுக்கும் தொகுதி மாறும் சீமான்: காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

