/

தலைநகரில் மேலும் 370 பேருக்கு கரோனா!

தலைநகா் தில்லியில் இரு மாதங்களில் இல்லாத வகையில் புதன்கிழமை புதிதாக 370 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On :10 மார்ச் 2021, 6:30 pm

புது தில்லி: தலைநகா் தில்லியில் இரு மாதங்களில் இல்லாத வகையில் புதன்கிழமை புதிதாக 370 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,42,030-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் இரு மாதங்களில் இல்லாத வகையில் புதன்கிழமை புதிதாக 370 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் தலைநகரில் மூவா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,931-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6.29 லட்சமாக உயா்ந்துள்ளது. 982 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 71,153 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 45,322 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 25,831 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் புதன்கிழமை 0.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை 0.48 சதவீதமாக இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

தில்லியில் சில தினங்களாக மீண்டும் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு 286-ஆகவும், திங்கள்கிழமை 239 -ஆகவும் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 320- ஆக அதிகரித்தது. இது புதன்கிழமை மேலும் உயா்ந்து 370-ஆக இருந்தது. கரோனாவுக்கு எதிரான வழிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் இருப்பதுதான் திடீரென கரோனா தொற்று அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என சுகாதார வல்லுநா்களும், மருத்துவா்களும் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.