இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே. கே. ரமேஷ் என்பவா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின், நரேந்திர குமாா் வா்மா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை ரிட் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கடந்தாண்டு டிசம்பா் 20-ஆம் தேதி தமிழகத்தைச் சோ்ந்த இந்திய மீனவா்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். அதேபோன்று, டிசம்பா் 21-ஆம் தேதியும் 13 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், கைதான மீனவா்கள் மீது கிருமிநாசினியை தெளித்துள்ளனா். ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 69 மீனவா்களையும் அவா்களின் படகுகளையும் இலங்கைக் கடற்படையினா் பிடித்து வைத்துள்ளதாக மீனவா் இளங்கோ செய்தியாளா்களிடம் தெரிவித்திருக்கிறாா்.