/

வேகத் தடைகளுக்கான அளவுகோல் என்ன? சாலைகளில் அதன்படிதான் உள்ளனவா?

வேகத் தடைகளுக்கான அளவுகோலும் சாலைகள் அதன்படிதான் உள்ளனவா என்பது பற்றியும்

News image

சுங்கச்சாவடியில் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:12 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தேர்தல் காலம் என்றாலே, பெரும்பாலும் சாலைகள் பழுதுபார்க்கப்படும், அது வேட்பாளர்கள் நல்ல முறையில் வந்து பிரசாரம் செய்வதற்காக என்று அமைக்கப்படுமா? அல்லது மக்களை திருப்திப்படுத்துவதற்காக அமைக்கப்படுமா என்பதெல்லாம் வேறுகதை.

அந்த சாலைகள், தேர்தல் முடியும் வரை அப்படியே இருக்குமா என்பதற்கு எல்லாம் பதில்கள் இல்லை என்றாலும், புதிதாகப் போடப்படும் சாலைகளுக்கு இடையே அமைக்கப்படும் வேகத்தடைகள் பற்றியதே மக்களின் பெரிய கேள்வியாக உள்ளது.

ஒரு சாலையில் வேகத்தடை என்பது எப்படி அமைய வேண்டும் என்று ஏதேனும் வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கிறதா? அந்த நெறிமுறைகளைச் சொல்லியே, சாலை போடும்போது வேகத்தடைகள் அமைக்கப்படுகிறதா? என்பதே வாகன ஓட்டிகளின் கவலை.

அண்மையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. புதிதாக சாலை போட்டதும் நம் இளைஞர்கள் வாகனத்தில் பறப்பார்களே என்று கருதி புதிது புதிதாக வேகத் தடைகளும் அமைக்கப்பட்டன.

இது இப்படியிருக்க, போக்குவரத்து நெரிசல் அதிகரித்த ஒரு சில இடங்களில் அவசரத்துக்கு பிளாஸ்டிக் வேகத் தடைகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்த வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதாவது, சாலைகளில் இருக்கும் நிரந்தர வேகத்தடைகள், வாகன ஓட்டிகளுக்கு கடும் சவாலாக இருக்கும்போது, இந்த அவசர ஆபத்துக்கு உதவும் பிளாஸ்டிக் வேகத்தடைகள் வேகத்துக்கு மட்டுமல்ல, வாகனத்துக்கே பெரும் தடையாக அமைந்துவிடுகின்றன.

தற்போது அம்பத்தூரில் உள்ள டிஐ பள்ளிச் சாலை, திருவேங்கடம் சாலைகளில் அதுபோன்ற பிளாஸ்டிக் வேகத் தடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், எங்குமே சாலைகளில் இதுபோன்றவற்றை அமைக்க வேண்டாம் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சாலையில் அமைக்கப்படும் ஒரு வேகத்தடையானது, 3.7 மீட்டர் அகலத்துடன் 10 செ.மீ. உயரம், 17 மீ. ரேடியஸ் வளைவு கொண்டு, வாகனங்கள் 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அதன் மீது தெர்மோபிளாஸ்டிக் பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் வழிகாட்டுதல்.

ஆனால், பெரும்பாலான சாலைகளில் உள்ள வேகத்தடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவிலும், உயரத்திலும், அகலத்திலும்தான் இருக்கின்றன. சில வேகத்தடைகள் மட்டுமே அகலமாக வாகன ஓட்டிகளுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான வேகத்தடைகள் அதிக உயரத்துடன் அமைக்கப்படுகின்றன. சில வேகத்தடைகளுக்கு பெயிண்ட் அடிப்பதேயில்லை. வாகன ஓட்டிகளே அருகில் வந்து பிறகு தெரிந்துகொண்டு பிரேக் பிடித்துத்தான் வேகத்தடையை கடந்து செல்ல வேண்டியது உள்ளது. இதனால் எவ்வளவு மெதுவாக வந்தாலும் வாகனத்தை விட்டு வாகன ஓட்டிகள் ஒரு சில செ.மீ. வரை குதித்து பிறகு வாகனத்தில் உட்காரும் நிலையே நீடிக்கிறது.

இப்படி ஒருவர் ஒரு பயணத்துக்கு, குறைந்தபட்சம் ஐந்து முறை வேகத்தடையால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு எந்தவிதமான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. எனவே, சாலை பாதுகாப்பு என்பதே வாகன ஓட்டிகளுக்காகத்தான் என்பதால் வழிகாட்டு நெறிமுறைகள்படி வேகத்தடைகள் அமைக்கப்பட்டால், சாலைக்கும் நல்லது, வாகன ஓட்டிகளுக்கும் நல்லது என மக்கள் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.