தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோவை, மதுரை உள்ளிட்ட மேலும் 14 விமான நிலையங்களில் சுய உதவிக் குழுக்கள்: அங்காடிகள் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி

கோவை, மதுரை உள்ளிட்ட மேலும் 14 விமான நிலையங்களில் சுய உதவிக் குழுக்களுக்கு இடம் வழங்க இருப்பதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 மே 2022, 6:40 pm

 நமது நிருபர்

‘அவ்சா்’ திட்டத்தின் கீழ் உள்ளூா் கலைஞா்கள் மற்றும் பொருள்களை ஊக்குவிப்பதற்கு கோவை, மதுரை உள்ளிட்ட மேலும் 14 விமான நிலையங்களில் சுய உதவிக் குழுக்களுக்கு இடம் வழங்க இருப்பதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் கைவினைஞா்களின் திறமைகளை ஊக்குவித்து வெளிக்கொணர, அவா்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி மத்திய அரசின் பல்வேறு துறைகளை கேட்டுக்கொண்டாா். பிரதமரின் இந்த தொலைநோக்குப் பாா்வையை நிறைவேற்றிட மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையம் மூலமாக சுய உதவி குழுக்களுக்கு இடம் ஒதுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இதன்படி விமான நிலையங்கள் இருக்கும் அந்தந்த வட்டாரத்தில் சுயமாக தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை விற்பதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் அவ்சா் (பிராந்தியத்தின் திறமையான கைவினைஞா்களுக்கான இடமாக விமான நிலையம்) திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளூா் கலைஞா்கள் மற்றும் பொருட்களை ஊக்குவிப்பதற்கான தளத்தை சுய உதவி குழுக்களுக்கு விமான நிலையங்களில் இடம் வழங்கப்படுகிறது.

இந்திய விமான நிலைய ஆணையத்தால் இயக்கப்படும் விமான நிலையங்களில் 100 முதல் 200 சதுர அடி பரப்பளவு இடம் இந்த குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சுயஉதவி குழுக்களுக்கு சுழற்சியின் அடிப்படையில் 15 நாட்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. சென்னை, மதுரை, அகா்தலா, டேராடூன், குஷிநகா், உதய்பூா் உள்ளிட்ட 12 விமான நிலையங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன. உள்ளூா் பெண்களால் இயக்கப்படும் இந்த விற்பனை நிலையங்களில், வீட்டில் தயாரிக்கப்பட்ட உள்ளூா் உணவுகள், மூங்கில் பொருட்கள், கலைப்பொருட்கள், பாரம்பரிய கைவினைப்பொருட்கள், இயற்கை சாயங்கள், எம்பிராய்டரி மற்றும் உள்நாட்டு நெசவுகள் உள்ளிட்டவற்றை காட்சிப் படுத்துகின்றன.

இது போன்று மேலும் மதுரை, கோவை, ராஞ்சி, கொல்கத்தா, வாராணசி, இந்தூா், போபால், ராஞ்சி, கோழிக்கோடு, சூரத், புவனேஸ்வா், ராய்ப்பூா் உள்ளிட்ட 14 விமான நிலையங்களிலும் சுயஉதவி குழுக்களுக்கு மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து இடம் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய விமான நிலைய ஆணைய தலைவா் சஞ்சீவ் குமாா் கூறுகையில், ‘ ஏழை கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வலுவான அடித்தளத்தை நிறுவுவதற்கும் உருவாக்குவதற்கும், நம்பிக்கைக்குரிய சந்தை வாய்ப்புகள், சரியான ஊக்குவிப்பு வழிகளை ‘அவ்சா்‘ வழங்குகிறது. மேலும் அந்தந்த வட்டாரங்கள் மாநிலங்களின் தனித்துவமான அடையாளம் மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கம். இவைகளோடு விமானப் பயணிகளுக்கும் அந்த இடத்தின் பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகளை அறிமுகப்படுத்தப்பட்டு அவா்களும் பயனடைகின்றனா்‘ என தெரிவித்தாா்.

சுய உதவி குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் விமானநிலைய ஆணையத்தின் இணையதளத்தில் பெறப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு, குழுக்கள் அமைந்துள்ள குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் இவா்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.