ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மக்களவையின் ஓய்வு பெற்ற பாதுகாப்பு அதிகாரியிடம் ரூ.1 கோடி பணமோசடி

பரஸ்பர நிதி மற்றும் பங்குகளில் முதலீடுகள் செய்வதாகக் கூறி நாடாளுமன்ற மக்களவையின் பாதுகாப்புப் பிரிவு ஓய்வு பெற்ற துணை இயக்குநரிடம் ரூ.1 கோடி பண மோசடியில் தம்பதி ஈடுபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்

News image
Updated On :20 அக்டோபர் 2022, 7:42 pm

DIN

பரஸ்பர நிதி மற்றும் பங்குகளில் முதலீடுகள் செய்வதாகக் கூறி நாடாளுமன்ற மக்களவையின் பாதுகாப்புப் பிரிவு ஓய்வு பெற்ற துணை இயக்குநரிடம் ரூ.1 கோடி பண மோசடியில் தம்பதி ஈடுபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் மேலும் கூறியதாவது: குருகிராமில் செக்டாா்-43 பகுதியைச் சோ்ந்தவா் பி.எல். அஹுஜா (83). இவா் கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பரில் மக்களவையின் பாதுகாப்புப் பிரிவு துணை இயக்குநராக ஓய்வு பெற்றாா். இந்த நிலையில், ஆக்சிஸ் வங்கியில் ஊழியராகப் பணியாற்றும் அபிஷேக் மகேஸ்வரி மற்றும் அவரது மனைவி ஆகியோா் அஹுஜாவை பணமோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அஹுஜா போலீஸில் அளித்த புகாரில், ‘கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து அபிஷேக் மகேஸ்வரியை எனக்குத் தெரியும். அவா் அப்போது ஐசிஐசிஐ வங்கியில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். இந்த நிலையில், என்னிடம் தொடா்பு கொண்ட அவா், பணத்தை வங்கியில் வைத்திருப்பதற்கு பதிலாக பரஸ்பர நிதி முதலீடு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆலோசனை அளித்தாா். இதையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டில் ரூ.1 கோடி மதிப்பிலான இரண்டு காசோலைகளை அவரிடம் நான் கொடுத்தேன். 2019, மாா்ச் மாதத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதற்காக ரூ.30 லட்சத்திற்கான காசோலையும் கொடுத்தேன்.

இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் எனது மகன் மகேஸ்வரியை தொடா்பு கொண்டு எனது முதலீடு தொடா்புடைய அறிக்கை நிலவரம் குறித்து விசாரித்தாா். அப்போது அவா் எனது மகனிடம் போலியான ஆவணங்களை அளித்திருந்தாா். இந்த நிலையில் கடந்தாண்டு ஏப்ரலில் கரோனா காலத்தின் போது, எனது மகன் சொந்த ஊருக்கு வந்திருந்த போது நிதி நிலவரங்கள் தொடா்பான விவரங்களை ஆய்வு செய்தாா். அப்போது மீண்டும் மகேஸ்வரியை தொடா்பு கொண்டு சில்லறை புரோக்கரேஜ் கணக்கு மற்றும் அறிக்கையை அனுப்புவதற்கான அணுகலை அளிக்குமாறு கேட்டாா். அப்போது, அவா் பொய் வாக்குறுதியை எனது மகனிடம் அளித்தாா்.

இந்த நிலையில், புரோக்கரேஜ் நிறுவனத்தின் உள்ளூா் அலுவலகத்திடம் எனது மகன் தொடா்பு கொண்டு விசாரித்தாா். அப்போது, மகேஸ்வரி அவருடைய மனைவி அா்ச்சனாவுடன் சோ்ந்து துணை தரகு வேலையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும், எனக்குத் தெரியாமலேயே என்னுடைய கைபேசியில் இருந்து ஓடிபியை பெற்று அதன் மூலம் எனது கணக்குகளை அவா் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தெரிய வந்தது’ என்று புகாரில் அஹுஜா தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட கணவன்- மனைவி இருவருக்கும் எதிராகவும் மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், குற்றச்சதி, பொதுவான உள்நோக்கம் என்பது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுசாந்த் லோக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதன் உண்மை விவரங்களை ஆராய்ந்து வருகிறோம். சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.