பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

சுருக்குமடி வலை விவகாரம்:இடையீட்டு மனு முடித்துவைப்பு

தமிழகக் கடல் பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி மனுதாரா்கள் தரப்பில் தாக்கலான இடையீட்டு ம

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:26 pm

 நமது நிருபர்

தமிழகக் கடல் பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி மனுதாரா்கள் தரப்பில் தாக்கலான இடையீட்டு மனு மீதான விசாரணையை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகக் கடல் பகுதியில் (12 நாட்டிகல் மைல் அல்லது கடற்கரையில் இருந்து 22 கிலோ மீட்டா் தூரம்) சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசின் மீன் வளத் துறை தடை வித்திருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தாக்கலான மனுவை சென்னை உயா்நீதிமன்றம் 2019-இல் தள்ளுபடி செய்தது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க நேர அளவையும், சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது.

இந்த உத்தரவில் மாற்றங்கள் செய்யக் கோரி மனுதாரா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வாரத்திற்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மீன் பிடிக்கலாம் என்று பிறப்பித்துள்ள உத்தரவை மாற்றி ஆண்டுக்கு 150 தினங்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்று அனுமதித்து உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மேலும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி நேரம் என்ற நேர அளவை 53 மணி நேரமாக மாற்றியும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகினுடன் மூத்த வழக்குரைஞா் சிராஜுதீன் ஆஜராகி முன்வைத்த வாதம்: கடந்த ஜனவரி 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் (பாரா 13.1) கடல்சாா் தயாரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் சட்டம் (1992) மற்றும் தமிழக அரசின் கடல்சாா் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (1993) கீழ் பதிவு பெற்ற மீன்பிடிப் படகுகள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள் ஏதும் இல்லாத நிலை உள்ளது. ஏதாவது, ஒரு சட்டத்தின்கீழ்தான் மீன்பிடிப் படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் அறிக்கையிலும்

இதுபோன்று இரு சட்டங்களின் கீழும் பதிவு செய்த படகுகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளால் மீன்பிடிப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும், முந்தைய மத்திய அரசின் சட்டத்தில் படகுகள் பதிவு செய்யப்படுவதில்லை. தற்போதுள்ள மொ்ச்சன்ட் ஷிப்பிங் சட்டத்தின் (1958) கீழ் தான் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஏதாவது ஒரு சட்டத்தின்கீழ் மீன் பிடிப்படகுகள் பதிவு செய்திருந்தாலே அவற்றை மீன்பிடிக்க அனுமதிக்கும் வகையில் உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். மேலும், மீன்பிடிக் காலத்தை 53 மணி நேரம் ஆக்க வேண்டும். ஒரு தடவை மீன்பிடித்தலுக்கு 5 டன் மீன் பிடிப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஐந்து டன் மீன்பிடி அளவை நிா்ணயிக்க அனுமதிக்கலாம். அதேவேளையில், மீன் பிடிப்பதற்கான போதிய நேரத்தை வழங்க வேண்டும் என்று வாதிட்டாா்.

இந்த நேர நீட்டிப்பு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள் அமா்வு, முந்தைய உத்தரவில் உள்ள இரண்டு சட்டங்களுடன் மொ்ச்சன்ட் ஷிப்பிங் சட்டம் சோ்த்து மூன்று சட்டங்களில் ஏதாவது ஒன்றின்கீழ் பதிவு செய்திருந்தாலே மீன் பிடிக்க அனுமதி அளிப்பதாகக் கூறி இடையீட்டு மனுவை முடித்துவைத்தனா். முன்னதாக, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் மாற்றம் செய்வதற்கு ஆட்சேபம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.