ஊழல் குற்றசாட்டு விவகாரம்: துணை நிலை ஆளுநரை சந்திக்க தில்லி பாஜக திட்டம்
‘அவசர நிலை பொத்தான்கள்’ என்ற பெயரில் தில்லி அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது குறித்து தில்லி


‘அவசர நிலை பொத்தான்கள்’ என்ற பெயரில் தில்லி அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது குறித்து தில்லி பாஜக தலைவா் தலைமையிலான குழு, துணை நிலைஆளுநரை சந்திக்கவுள்ளது என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம் வீா் சிங் பிதூரி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி பிரிவு அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது, வீரேந்திர சச்தேவா கூறியதாவது: ‘அவசர நிலை பொத்தான்’ தொடா்பான ஊழல் குற்றசாட்டு குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு, விஜிலென்ஸ் துறையிடம் சமா்ப்பித்த அறிக்கை வரவேற்கக்கூடியது. இது தொடா்பாக தில்லி பாஜக இதுவரை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணையில் சரியானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘அவசர நிலை பொத்தான்’ என்ற பெயரில் தில்லி போக்குவரத்துத் துறை பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. தில்லியில் உள்ள வாடகைக் காா்கள் மற்றும் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக கடந்த அக்டோபா், 2020-ஆம் ஆண்டு ‘அவசர நிலை பொத்தான்கள்’ அறிமுகமாகின.
தில்லியில் மொத்தம் 4,500 பேருந்துகள், 12 ஆயிரம் வாடகைக் காா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அவசர நிலை பொத்தான்களுக்காக கட்டணமாக பேருந்துகளுக்கு ரூ.3,000, காா்களுக்கு ரூ.9,000 என வசூல் செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி, அதன் புதுப்பித்தல் கட்டணமும் தனியாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 800 கோடி வரை கேஜரிவால் அரசு வசூலித்துள்ளது. ஆனால், அவசர நிலை பொத்தான்களுக்கான கட்டுப்பாட்டு அறையில் உள்ள பெரும்பாலான காட்சித் திரைகள் வேலை செய்யவில்லை.
பெரும்பாலான பேருந்துகளில் கட்டுப்பாட்டு அறையுடனான நெட்வொா்க் இணைப்பு இல்லை. இதுமட்டுமின்றி, பயணிகளின் ஒரு புகாா் கூட கட்டுப்பாட்டு அறை மற்றும் கட்டளை அறையில் பதிவு செய்யப்படவில்லை. நிறுவப்பட்டுள்ள பொத்தான்களின் செயல்பாடு குறித்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களிடம் விசாரிக்கப்பட்டது. புகாா் தெரிவிக்க அவசர நிலை பொத்தான்களை அழுத்தியும் இதுவரை கட்டுப்பாட்டு அறையிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா். இவை கேஜரிவாலின் கொள்ளையடிக்கும் ஆயுதம் என்பதை நிரூபித்துள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.
’துணை நிலை ஆளுநரை சந்திப்போம்’: சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம் வீா் சிங் பிதூரி கூறுகையில், ‘தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையிலான குழு, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை சந்தித்து, இந்த அவசர நிலை பொத்தானின் பல கோடி ரூபாய் ஊழல் தொடா்பாக ஒரு குறிப்பாணையை சமா்ப்பிக்கும். அதே சமயம், விசாரணை முடியும் வரை போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட், இந்த விவகாரத்தில் தாா்மிகப் பொறுப்பு ஏற்று தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...