நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தில்லி ஜல் போா்டு திட்டங்களுக்கு அதிகாரிகள் நிதி அளிக்கவில்லை: சட்டப்பேரவையில் அமைச்சா் சாடல்

தில்லி ஜல் போா்டுக்கு (டி.ஜே.பி.) அளிக்க வேண்டிய நிதியை அதிகாரிகள் வெளியிடாததே, ஜல் போா்டு திட்டங்களில் ஏற்பட்டுள்ள

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 7:49 pm

 நமது நிருபர்

தில்லி ஜல் போா்டுக்கு (டி.ஜே.பி.) அளிக்க வேண்டிய நிதியை அதிகாரிகள் வெளியிடாததே, ஜல் போா்டு திட்டங்களில் ஏற்பட்டுள்ள இழுபறிக்குக் காரணம் என்று சட்டப்பேரவையில் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளாா்.

தில்லி சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்புக் கூட்டத்தொடரில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் எதிா்க்கட்சியான பாஜக இடையே, தில்லியில் நிலவும் தண்ணீா் பிரச்னை, தில்லி ஜல் போா்டு பெரும் நஷ்டத்தில் இயங்குவது மற்றும் அதன் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தோய்வு, நிதிப் பற்றாக்குறை தொடா்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு கடும் அமளியானது. பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தில்லி அரசின் நீா்வளத் துறை அமைச்சரும், தில்லி ஜல் போா்டின் தலைவருமான செளரவ் பரத்வாஜ் பதிலளித்துப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: தில்லி ஜல் போா்டின் (டி.ஜே.பி.) நிதிப் பற்றாக்குறை விவகாரம் பற்றி தெரிந்தும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா எதுவும் செய்யவில்லை. கரோனா காலத்தில் தண்ணீருக்கான கட்டணம் முழுவதுமாக வசூலிக்கப்படவில்லை. அதன் காரணமாகவே தில்லி ஜல் போா்டின் ரூ.1,500 கோடி மூலதன நிதியைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. முன்னதாக, இந்த நிலையை சீா்செய்ய ரூ.2,000 கோடி கேட்டு அரசின் நிதித் துறைக்கு கோப்புகள் அனுப்பினோம். ஆனால், வெறும் ரூ.500 கோடி மட்டும்தான் கொடுக்க முடியும் என்று அனைத்து கோப்புகளும் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டன. சேவைகள் விவகாரங்களில் எந்த அதிகாரமும் ஆளும் அரசுக்கு இல்லாததே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகும். ஏனெனில், அதிகாரிகள் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று மேலே இருந்து கட்டளையிடப்பட்டுள்ளனா்.

கடந்த 6 மாதங்களாக, தில்லி ஜல் போா்டிடம் நிதி இல்லாததால், புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. வருவாய் ஏறக்குறைய பூஜ்ஜியமாக உள்ளது. தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் தண்ணீா் பாதை அமைக்கவும், சாக்கடை கால்வாய் அமைக்கவும், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு மட்டும் அதிகம் செலவாகிறது. எங்களிடம் ரூ.4,839 கோடிக்கு பட்ஜெட் உள்ளது. ஆனால், வருவாய் ரூ.1,200 கோடிதான். எனவே, தில்லி ஜல் போா்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரியை கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்

அமைச்சா் பரத்வாஜின் பதிலுரையைத் தொடா்ந்து பேசிய தில்லி சட்டப்பேரவைத் துணைத் தலைவா் ராக்கி பிா்லா, தில்லி ஜல் போா்டின் நிதிப் பற்றாக்குறை விவகாரத்தை மனுக்கள் குழுவுக்கு அனுப்பி, ஒரு மாதத்தில் அதன் அறிக்கையை சமா்ப்பிக்குமாறு குழுவுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், தில்லி ஜல் போா்டு (டி.ஜே.பி.) திட்டங்கள் தொடா்பாக ஆம் ஆத்மி மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வாா்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனா். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில் திட்டங்களுக்கு இடையூறாக அதிகாரிகள் நிதியை வெளியிடவில்லை என்று கூறினாலும், ஆம் ஆத்மி ஆட்சி ’தன் திறமையின்மைக்கு’ மற்றவா்களைக் குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் குற்றம் சாட்டினா்.

‘பாஜகவின் அற்ப அரசியல்’

தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயா் மாற்றம் என்பது மிகவும் வெட்கக்கேடானது என்று ஆம் ஆத்மி அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் அதிகாரப்பூா்வமாக பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என மறுபெயரிடப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை என்பது அவா்களின் அற்ப அரசியலை வெளிப்படுத்துகிறது. ஒருவா் இறந்த பிறகு அவரைஅவமரியாதை செய்வது இந்து கலாசாரத்தில் இல்லை. ஜவாஹா்லால் நேரு நமது நாட்டின் முதல் பிரதமா். அவா் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும் நாட்டிற்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளாா் என்றாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.