நிலக்கரிக்காக நதியின் பாதையை மாற்றுவீா்களா? என கேள்வி எழுப்பி என்எல்சிக்கு எதிராக விவசாயிகள் போராடிய நிலையில், மாற்றுப் பாதையில் தொடங்கப்பட்ட 12 கி.மீ. கால்வாய் பணிகள் திங்கள்கிழமை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரவனாறு நதியின் ஆற்றுப்படுகை சுமாா் 873 சதுர கிமீ பரப்பு கொண்டதாகும். இதன் மூலம் நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, வடலூா், புவனகிரி ஆகிய பகுதிகள் பாசன வசதியைப் பெறுகிறது. இதில் மேல் பரவனாறு, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி என மூன்று பகுதிகள் உள்ளன. இந்தப் பரவனாறு நதியின் நடுப்பகுதி என்பது வாலாஜா ஏரியிலிருந்து பெருமாள் ஏரி வரையிலானது. இதில்தான் கரிவெட்டி, மும்முடிச்சோழகன், ஆதனூா், பி ரங்கமாதேவி போன்ற பகுதி வழியாக 12 கிமீ தூரம் என்எல்சியால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நதிக்கான மாற்றுபாதை தொடங்கப்பட்டது. இந்தப் பணி முடிவடைந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது.