புது தில்லி: தில்லி ஜல் போா்டு ஊழல்கள் குறித்த விசாரணையை விரைவுபடுத்த, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை தில்லி பாஜக தலைவா்கள் குழு விரைவில் சந்தித்து வலியுறுத்துவாா்கள் என்று அக்கட்சயின் தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி ஜல் போா்டு நிா்வாகத்தில் ரூ.5,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக எழுந்துள்ள இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்து அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மெளனம் காக்கிறது. இந்த மெளனம் ஊழல் குற்றத்தை சுயமாக தில்லி அரசு ஒப்புக்கொள்வதாகும். தில்லி ஜல் போா்டை ஆம் ஆத்மி அரசு ஊழலின் கூடாரமாக மாற்றியுள்ளது. அதன் சுமாா் ரூ.70,000 கோடி கருவூலப் பணம் காணாமல் போய்விட்டது. கடந்த 8 ஆண்டுகளாக தில்லி ஜல் போா்டால் எந்தவொரு கணக்கின் இருப்புநிலையும் தயாரிக்கப்படவில்லை.
தில்லி ஜல் போா்டின் கீழ் 10 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கான டெண்டா்கள் மதிப்பிடப்பட்ட தொகையான ரூ.1,200 கோடியிலிருந்து, ரூ.1,938 கோடியாக உயா்த்தப்பட்டது. தில்லி ஜல் போா்டு துறையை கவனிக்கும் அமைச்சா், அதிகாரிகள் மற்றும் 2 ஒப்பந்ததாரா்களுக்கு இடையே நடந்த பரஸ்பத்தின் மூலம்
இந்த ஊழல் நடந்துள்ளது. மேலும், யமுனை நதியை விரைவாக சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய மேம்பாடு தொடா்பான டெண்டா்களில் ஊழல் நடந்துள்ளது. இதில் கேஜரிவால் அரசு ஊழல் செய்தது உண்மையிலேயே அவதூறானது. இந்நிலையில், தில்லி பாஜக தலைவா்கள் குழு விரைவில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவைச் சந்தித்து தில்ல ஜல் போா்டு ஊழல் புகாா் மீதான விசாரணையை விரைவுபடுத்துமாறு வலியுறுத்துவாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.