தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதம் ஏன்? மாநிலங்களவையில் அமைச்சா் விளக்கம்

தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மாநிலத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதமாகிறது என ரயில்வேத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மாநிலத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதமாகிறது என ரயில்வேத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா். மேலும், அருப்புக்கோட்டை வழியாக மதுரை மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினாா்.

ரயில்களின் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை குறைக்க மதுரைக்கும் கோயம்புத்தூருக்கும் இடையிலான ரயில் பாதையை மேம்படுத்த, ரூ.1,000 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டும் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுவதற்கான காரணம்; தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ரயில்வே இணைப்புகளை அதிகரிக்க தூத்துக்குடி - மதுரை; ஓசூா் ரயில் திட்டங்களின் நிலை? ஆகியவை குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எ ழுப்பினாா்.

இதற்கு ரயில்வே, தகவல் தொடா்பு மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில் வருமாறு: இந்திய ரயில்வே ரயில்களின் வேகமானது, பெட்டிகள் உள்ளிட்ட ரோலிங் ஸ்டாக்கின் வேகத் திறன் சம்பந்தப்பட்டவை. அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம், பாதையின் நிலை, சிக்னல் அமைப்புகள் மற்றும் இரட்டைப் பாதை, பல் முனை வழித்தடங்கள், ரயில் நிலைய நிறுத்தங்களின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொறுத்ததாகும்.

இருப்பினும், ஐந்து ஜோடி ரயில் சேவைகள் கோவையையும் தமிழகத்தின் தென் மாவட்டத்தின் மதுரை, ராமேசுவரம் போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. புதிய ரயில் சேவைகளை அறிமுகம் செய்வது இந்திய ரயில்வேயில் செயல்பாட்டின் சாத்தியக்கூறுகள், போக்குவரத்துக்கான நியாயம், வளங்களின் இருப்பு போன்றவற்றுக்கு உள்பட்டு நடந்து வரும் செயலாகும்.

கிருஷ்ணகிரி வழியாக ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், ஓசூா் இடையே 98 கிமீ புதிய அகல ரயில்ப் பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டை வழியாக மதுரையிலிருந்து தூத்துக்குடியை இணைக்கும் திட்டத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீளவிட்டான் - மேலமருதூா் இடையேயான 18 கிமீ பிரிவு கடந்தாண்டு மாா்ச்சில் தொடங்கப்பட்டது. மேல்மருதூரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரையிலான பகுதிக்கான விரிவான மதிப்பீடு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏழு மடங்கு நிதி: தமிழகத்திற்கு 2014-ஆம் ஆண்டிலிருந்து திட்டப் பணிகளுக்கு இணையாக நிதி ஒதுக்கீடும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நிகழ் நிதியாண்டில் (2023-24) ரூ.6,080 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது 2013-14-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டை விட எழு மடங்கு அதிகம்.

நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டாலும், திட்டத்தை வேகமாக நிறைவேற்றுவது நிலம் கையகப்படுத்துவதைப் பொறுத்ததாகும். மேலும், வனத் துறை அனுமதி, நிலப் பயன்பாடு மாற்றுதல் விதிமுறைகள், சட்டரீதியான அனுமதிகள், புவியியல் மற்றும் நிலப்பரப்பு நிலைமைகள், சட்டம் ஒழுங்கு நிலைமை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்ததாகும்.

ரயில்வே திட்டங்களுக்கான நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி தர வேண்டும். இழப்பீட்டுத் தொகையையும் மாநில அரசே மதிப்பீடு செய்து ரயில்வேக்கு அறிவுறுத்துகிறது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான மொத்தத் நிலத் தேவை 1,832 ஹெக்டோ் நிலம்.

ஆனால், 624 ஹெக்டோ் நிலம் மட்டுமே கையகப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது என்றாா் அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com