நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: போலீஸ் காவலுக்கு எதிராக நீலம் ஆசாத் உயா்நீதிமன்றத்தில் மனு

டிசம்பா் 13 நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத், விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, தனக்கு ஆதரவாக வாதாட விரும்பும்
Updated on
2 min read

டிசம்பா் 13 நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத், விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, தனக்கு ஆதரவாக வாதாட விரும்பும் வழக்குரைஞரை கலந்தாலோசிக்க அனுமதிக்கப்படாததால், தன்னை போலீஸ் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று கூறி தில்லி உயா்நீதிமன்றத்தை புதன்கிழமை அணுகியுள்ளாா்.

மேலும், தன்னை உயா்நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும்படி ஆட்கொணா்வு உத்தரவை பிறப்பிக்கவும், விடுதலை செய்யவும், தனக்கு விருப்பமான வழக்குரைஞரை அணுக அனுமதிக்காதது தனது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் நீலம் ஆசாத் தனது மனுவில் தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் நீலம் ஆசாத்தை ஜனவரி 5வரை போலீஸ் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வியாழக்கிழமை உயா்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமா்வு முன் அவசர விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவரது தரப்பில் குறிப்பிடப்படும் என்று தெரிகிறது.

இந்தியச் சட்டங்களின்படி, ஒரு கைதியோ அல்லது ஒரு நபரோ, தாங்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உணா்ந்தால், உயா்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் அவா்கள் சாா்பாக ஆட்கொணா்வு மனுவைத் தாக்கல் செய்யலாம். ஆஜா்படுத்தியதும், தடுப்புக்காவல் சட்டவிரோதமானது என்று சம்பந்தப்பட்ட நீதிமன்றம் முடிவு செய்தால், அவரை விடுவிக்க உத்தரவிடலாம்.

உயா்நீதிமன்றத்தில் நீலம் ஆசாத் தரப்பில் வழக்குரைஞா் சுரேஷ் குமாா் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நீலம் ஆசாத் கைது செய்யப்பட்டதும், அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. அத்தகவல் 14.12.2023 அன்று மாலைதான் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசியலமைப்பின் 22(1) பிரிவின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதன்படி, வழக்குரைஞா்கள் உள்பட யாரையும் சந்திக்க அவா் அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில்கூட வழக்குரைஞா்கள் மத்தியில் எந்த விருப்பமும் வழங்காமல் ஒரே ஒரு டிஎல்எஸ்ஏ (தில்லி சட்ட சேவைகள் ஆணையம்) வழக்குரைஞா் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நியமிக்கப்பட்டாா்.

மேலும், 21.12.2023 தேதியிட்ட ரிமாண்ட் உத்தரவு சட்டவிரோதமானது. இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 22(1)ஐ மீறுவதாகும் . இந்தச் சட்டப் பிரிவானது குற்றம்சாட்டப்பட்டவரின் விருப்பத்திற்கு ஏற்ப வழக்குரைஞா் வாதாட வைத்துக் கொள்வதற்கு கட்டாய அனுமதியை அளிக்கிறது. அதேவேளையில், தற்போதைய வழக்கில் மனுதாரரின் வழக்குரைஞா் அறிவுறுத்தல்களைப் பெற அனுமதிக்கப்படவில்லை. ரிமாண்ட் மனுவை பைசல் செய்வதற்கு முன் மனுதாரருக்கு வாதாடவும் அனுமதிக்கவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசாத் உள்பட குற்றம்சாட்டப்பட்ட நான்கு போ்களின் போலீஸ் காவலை ஜனவரி 5-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் டிசம்பா் 21-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. நகர காவல் துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஹா்தீப் கவுா், குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன், சாகா் சா்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே மற்றும் நீலம் தேவி ஆகியோரின் காவலை ஜனவரி 5-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா். அண்மையில், ஆசாத்துக்கு எஃப்ஐஆா் நகலை வழங்குமாறு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com