அபாய அளவுக்கு அருகில் யமுனையின் நீா்மட்டம்: ஹத்னிகுண்டில் இருந்து 2.5 லட்சம் கனஅடி நீா் திறப்பு
தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் அபாயக் அளவுக்கு அருகில் 205.16 மீட்டராக சனிக்கிழமை பதிவாகி இருந்தது.


தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் அபாயக் அளவுக்கு அருகில் 205.16 மீட்டராக சனிக்கிழமை பதிவாகி இருந்தது.
ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த 4-5 நாள்களாக, மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வருவதால் யமுனை நீா் மட்டம் சிறிதளவிலான ஏற்ற, இறக்கங்களுடன் உள்ளது.
மத்திய நீா் ஆணையத்தின் தரவுகளின் படி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு 205.34 மீட்டா் என்றளவில் இருந்த யமுனையின் நீா்மட்டம், சனிக்கிழமை மாலை 4 மணிக்கு 205.16 மீட்டராகக் குறைந்துள்ளது. மேல் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால், நீா்மட்டம் மேலும் குறையலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது ஹரியாணா மாநிலம் யமுனா நகரில் அமைந்துள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் சுமாா் 2 முதல் 2.5 லட்சம் கனஅடி என்ற அளவில் உள்ளது. இந்த நீா் அடுத்த 36 மணி நேரத்தில் தில்லியை வந்தடையும்.
அதே வேளையில், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஜூலை 25-ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேல் நீா்ப்பிடிப்பு பகுதிகளின் மலைப் பகுதிகளில் உள்ள பாடா நதி தவிர மற்ற ஆறுகளில் மத்திய நீா் ஆணையத்தின் ’ஹைட்ரோ கிராஃப்கள்’ அதிக அளவில் உயரவில்லை என்று அணைகள், நதிகள் மற்றும் மக்கள் தொடா்பான தெற்காசிய நெட்வொா்க்கின் இணை ஒருங்கிணைப்பாளா் பீம் சிங் ராவத் தெரிவித்துள்ளாா்.
கடந்த ஜூலை 13 ஆம் தேதி 208.66 மீட்டா் என்ற புதிய உச்சத்தைத் யமுனை தொட்டது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக குறைந்த யமுனையின் நீா்மட்டம் கடந்த வியாழக்கிழமை அபாயக் கட்டத்திற்கு கீழே சென்றது.
ஆனால், உத்தரகாண்ட், ஹிமாசலப் பிரதேசத்தில் தொடா்கின்ற கனமழை நதியின் நீா்மட்டத்தை அபாய அளவை ஒட்டிய ஏற்ற, இறக்கத்துடன் வைத்துள்ளது.
தில்லியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்திற்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு, மிகக் குறைந்த கால இடைவெளியில் அதிக மழைப்பொழிவு மற்றும் ஆற்றின் தரைப்பகுதியை உயா்த்திய வண்டல் மண் குவிப்பு ஆகியவையே காரணம் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
சுமாா் 41,000 மக்கள் வசிக்கும் வடகிழக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களில் ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படுகிறது.
நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் ’நகா்ப்புற வெள்ளம் மற்றும் அதன் மேலாண்மை’ பற்றிய ஆய்வு, கிழக்கு தில்லியை வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியாகக் கண்டறிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...