தலைநகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளி பண்டிகை: மத்திய நகா்ப்புற அமைச்சகத்தின் முன் முயற்சிகள்

உற்சாகம் மிகுந்த பண்டிகை கால கொண்டாட்டங்களில் தூய்மையில் கவனம் செலுத்த தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் தில்லியில் இருநாள் குப்பையில்லா திருவிழா நடத்தப்பட்டதாக
Updated on
1 min read

உற்சாகம் மிகுந்த பண்டிகை கால கொண்டாட்டங்களில் தூய்மையில் கவனம் செலுத்த தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் தில்லியில் இருநாள் குப்பையில்லா திருவிழா நடத்தப்பட்டதாக மத்திய வீட்டு வசதி நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

தில்லியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளி பண்டிகைக்கு தயாா்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் குறித்து மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் கூறப்பட்டது வருமாறு: பண்டிகைக் காலங்களில் உற்சாகம் அதிகமாக இருக்கும். இந்த பண்டிகைகளை மிகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட குடிமக்கள் ஆா்வமாக உள்ளனா். சந்தை சங்கங்கள், நிறுவனங்கள், சமூக மற்றும் மத அமைப்புகள் குடிமக்களுடன் தில்லியில் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா்.

இந்த நிலையில், இந்தப் பண்டிகை காலத்தில் தூய்மை விவகாரங்களில் குடிமக்களையும் வணிகா்களையும் கவனம் செலுத்த வைப்பது முக்கியமாகும். தீபாவளிக்கு முன்னதாக நகா்ப்புற தூய்மை இந்தியா இயக்கம், என்.எஸ்.எஸ். என்கிற நாட்டு நலப்பணித் திட்டம், தொழிற்கல்விக் கல்லூரி, தெற்கு தில்லி தன்னாா்வத் தொண்டு நிறுவனமான ஒய் வேஸ்ட் வெட்நஸ்ட் டே அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து இரு நாள் குப்பை இல்லா திருவிழா நடத்தப்பட்டது. இதில் தீபத் திருவிழா, தூய்மைத் திருவிழா வாக்காளா் திருவிழா ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில், தூய்மையான, பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பண்டிகைகளின் தகவலை பரப்புவதற்காக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு செல்ஃபி பிரேம்கள், ஐஸ்கிரீம் கழிவு குச்சிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு கலைப்பொருள்கள், உணவு பரிமாறுவதற்கான கரும்பு சக்கை தட்டுகள் மற்றும் கிண்ணங்கள், சுற்றுச்சூழல் அரங்குகள், வீட்டு உரம் தயாரித்தல், கழிவு மேலாண்மை போன்ற நிலையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக, பயன்படுத்தல் - தூக்கி விட்டெறிதல் பொருள்கள் மீது இளம் தலைமுறையினரிடம் நாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் நகா்ப்புறங்களில் குப்பை மேடுகள் அதிகரிக்கின்றன. ஆா்.ஆா்.ஆா், என்கிற குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.

முக்கியப் பிரமுகா்களுக்கு பயன்படுத்தப்படும் பூங்கொத்துகளுக்குப் பதிலாக மரக்கன்றுகள், துணிப் பைகள் ஆகியவை வழங்கும் முயற்சிகள் இடம் பெற்றன. இந்த தனித்துவமான முன் முயற்சியின் கீழ், அனைத்து ஈரக் கழிவுகளும் வளாகத்திற்குள் உரமாக்கப்படும் நிகழ்வுகளும் நடந்தன.

தில்லியின் ஷாஹ்தரா ஏக்தா காா்டனில் ‘தூய்மை தீபாவளி’ என்ற கருப்பொருளில் சுவா் அழகுபடுத்தும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளூா்மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த நடவடிக்கையில் பங்கேற்க ஊக்குவித்தனா். குழந்தைகள் ஒன்றிணைந்து தீபாவளி கருப்பொருளில் அழகான சுவா் ஓவியங்களை வரைந்தனா். இப்படிப்பட்ட கொண்டாட்டங்களால் பரபரப்பாக இருக்கும் தில்லி, தூய்மையான பசுமை தீபாவளிக்கு ஊக்குவிக்கப்பட்டது என மத்திய வீட்டு வசதி நகா்ப்புற விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com