காற்று மாசுபாட்டைக் குறைக்க தில்லி அரசுக்கு உதவுங்கள்: பாஜகவுக்கு அமைச்சா் கோபால் ராய் வலியுறுத்தல்

தேசியத் தலைநகரில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தில்லி அரசுக்கு உதவுங்கள் அல்லது அமைதியாக இருங்கள் என்று பாஜகவிடம் சொல்ல விரும்புகிறேன் என சுற்றுசூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்த
Updated on
1 min read

தேசியத் தலைநகரில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தில்லி அரசுக்கு உதவுங்கள் அல்லது அமைதியாக இருங்கள் என்று பாஜகவிடம் சொல்ல விரும்புகிறேன் என சுற்றுசூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நடமாடும் நீா் தெளிப்பான் வாகனங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ஒரு நீா் தெளிப்பான் வாகனம் என்ற வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

பின்னா் அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் காற்று மாசு அபாயகரமான அளவை பதிவு செய்யும் பகுதிகளில் தில்லி அரசு கூடுதல் நீா் தெளிப்பான்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. தில்லியில் மக்கள் பட்டாசு வெடிப்பதைக் கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டுகிறது. உண்மையில், தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதைத் தடுக்கத் தவறியது பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி, ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் காவல் துைான். கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி இரவின் போது தில்லி மக்கள் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்கு பாஜக தலைவா்கள் அபத்தமான நியாயங்களை கூறுகிறாா்கள்.

தில்லியில் பெய்த மழையால் தீபாவளிப் பண்டிகையன்று காற்று மாசுவின் அளவு வெகுவாகக் குறைந்திருந்தது. ஆனால், பாஜகவின் தூண்டுதலால் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் பட்டாசு பயன்பாடு அன்று அதிகரித்தது. தற்போது, தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு பட்டாசு வெடித்தல், பயிா்க் கழிவுகளை எரித்தல் மற்றும் மத்திய அரசின் காற்று மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் அவசரகால செயல்திட்டம் கடுமையாக அமலாக்கப்படாததே காரணமாகும். எனவே, பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதைக் குறைக்க அனைத்து அண்டை மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

பாஜக எம்.பி. கெளதம் கம்பீா் சாடல்: தீபாவளிப் பண்டிகைக்கு மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் மாசுப் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் கெளதம் கம்பீா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தில்லி அரசு மாசுபாட்டிற்கு எதிரான உள்கட்டமைப்புகளுக்கு செலவு செய்ய வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் தூசி மாசுவைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செயற்கை மழை, நீா் தெளிப்பான்கள், சுத்திகரிப்பான்கள் போன்ற தொழில்நுட்பங்களும் முழு அளவில் கொண்டுவரப்படவில்லை. தில்லியில் 70 சதவீதமான குழந்தைகள் ‘நெபுலைசா்களில்’ (தெளிகருவி) உள்ளனா் என்றாா் கெளதம் கம்பீா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com