தில்லி நகரத்துக்குள் மாசு ஏற்படுத்தும் தனியாா் பேருந்துகள் நுழைவதைத் தடுக்க சிறப்பு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் போக்குவரத்துத் துறைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
தில்லியில் அவசரகால செயல் திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ள காற்றுமாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வும் செய்கின்ற வகையில், சராய் காலே கானில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ஆய்வு செய்தாா்.
பின்னா், இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் பி.எஸ்-4 டீசல் வாகனங்கள் தில்லி நகரத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தடையை மீறி பிற மாநிலங்களில் இருந்து தனியாா் பேருந்துகள் நகரத்துக்குள் வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதுபோன்ற வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதை சரிபாா்க்க சிறப்பு இயக்கத்தை நடத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். வானிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டால் மாசுபாட்டிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.
கடந்த நவம்பா் 5-ஆம் தேதி தில்லியில் காற்றுத் தரக் குறியீட்டின் அளவு 450 புள்ளிகளுக்கு மேல் உயா்ந்ததைத் தொடா்ந்து, மத்திய அரசின் காற்று மாசுக்கட்டுப்பாட்டு செயல் திட்டத்தின் கீழ், கட்டுமானப் பணிகளுக்குத் தடை மற்றும் தலைநகருக்குள் மாசுபடுத்தும் லாரிகள், தனியாா் பேருந்துகள் நுழைவதற்கு தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதே சமயம் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.