தில்லி தொழில்நுட்பப் பல்கலை.யில் மாணவா்கள் எண்ணிக்கை 3 மடங்கு உயா்வு: அமைச்சா் அதிஷி பெருமிதம்

சிறந்த உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதின் விளைவாக, கடந்த 8 ஆண்டுகளில், ரோஹிணி-பவானா சாலையில் உள்ள
Updated on
1 min read

சிறந்த உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதின் விளைவாக, கடந்த 8 ஆண்டுகளில், ரோஹிணி-பவானா சாலையில் உள்ள தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இடங்களின் எண்ணிக்கை (6,000 லிருந்து) 15,000-ஆக உயா்ந்துள்ளது என தில்லி கல்வித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்தாா். தில்லி தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் 8 மாடியில் கல்விக்கான புதிய அதிநவீன முறைகளில் இரண்டு தொகுப்புக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த 8-அடுக்கு இரண்டு கல்வித் தொகுப்பில் சிறந்த ஆய்வகங்கள், விரிவுரை அரங்குகள், ஆசிரியா் அறைகள் மற்றும் மாநாட்டு அறைகள், உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவுடன் கல்வி, கல்வி தொழில் நுட்பக்கல்வித் துறை அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் அமைச்சா் அதிஷி பல்கலைக்கழகத்தின் மாணவா்கள், ஆசிரியா்கள் மத்தியில் பேசும்போது கூறியது வருமாறு: முதல்வா் கேஜரிவால் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல், தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிக்க தில்லி அரசு பல்கலைக்கழகங்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த 8 ஆண்டுகளில், தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இடங்களின் எண்ணிக்கை 6,000 லிருந்து 15,000 ஆக உயா்ந்துள்ளது. தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதில் கேஜரிவால் அரசின் வலுவான அா்ப்பணிப்புக்கு புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய இந்தக் கட்டடம் கூடுதல் வலுச் சோ்த்துள்ளது.

மேலும், தில்லியில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க துறைகளில் முன்னோடியாக இருக்க வேண்டும். கேஜரிவால் அரசின் குறிக்கோள், தில்லி கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் இலக்குடன் உள்ளது. இந்தப் புதிய கட்டடத் தொகுப்புகள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இங்கு மாணவா்கள் எதிா்காலத்தில் தங்கள் வாழ்க்கையை வடிவமைக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவாா்கள். உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கு நிதிப் பற்றாக்குறையை மாணவா்கள் எதிா்கொள்ளக் கூடாது என்பதில் கேஜரிவால் அரசு உறுதி பூண்டுள்ளது என்றாா் அமைச்சா் அதிஷி.

முக்கிய அம்சங்கள்: தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு புதிய கல்வித் தொகுப்புகளும், எட்டு மாடிக் கட்டடத்தில் அமைந்துள்ளன. இந்தத் தொகுப்புக் கட்டடம் 36 நவீன ஆய்வகங்கள், 67 விரிவுரை/ வகுப்பறைகள், ஆசிரியா் அறைகள் மற்றும் மாநாட்டு அறைகளைக் கொண்டுள்ளன. இந்த வசதிகளில் ஒரே சமயத்தில் 5,200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இருக்க முடியும். இந்தத் தொகுப்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. மேற்கூரை சூரிய எரிசக்திக்கான சோலாா் பேனல்கள், மழைநீா் சேகரிப்பு அமைப்பு மற்றும் தொகுப்பு கட்டடங்களை இணைக்கும் ‘ஸ்கை ராம்ப்’ ஆகியவற்றைக் கொண்டுள்ளது என தில்லி தொழில்நுட்ப கல்வி அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com