தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ஆம் ஆத்மி ஆட்சியில் மாநகராட்சியின் வளா்ச்சி முடங்கியுள்ளது: தில்லி பாஜக கண்டனம்

தில்லி மாநகராட்சியின் வளா்ச்சி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முடக்கி, சொத்து வரியை உயா்த்தி தில்லிவாசிகள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஆம் ஆத்மி நிா்வாகம் ஏற்படுத்தியுள்ளது என்று பாஜக தில்லி...

News image
Updated On :12 செப்டம்பர் 2023, 11:58 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி மாநகராட்சியின் வளா்ச்சி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முடக்கி, சொத்து வரியை உயா்த்தி தில்லிவாசிகள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஆம் ஆத்மி நிா்வாகம் ஏற்படுத்தியுள்ளது என்று பாஜக தில்லி பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பந்த் மாா்க்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் கமல்ஜீத் ஷெராவத், தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது கமல்ஜீத் ஷெராவத் கூறியதாவது: தில்லியில் உள்ள கிராம மக்கள் வீட்டு வரி செலுத்துமாறு மேயா் ஷெல்லி ஓபராய் அழுத்தம் கொடுக்கிறாா். இது கண்டனத்திற்குரியது. முன்னா் மாநகராட்சியில் ஆட்சியில் இருந்த பாஜக, கிராம மக்களின் வீட்டுக்கு வரி வசூலிக்கும் நகராட்சி சீா்திருத்தக் குழுவின் அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை. 200 சதுர மீட்டா் வரை உள்ள கிராம வீடுகளுக்கு பாஜக ஒருபோதும் வீட்டு வரி விதிக்கவில்லை.

தில்லி மாநகராட்சித் தோ்தலுக்கு முன்பு அரவிந்த் கேஜரிவால் வீட்டு வரியை தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தாா். ஆனால், தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள மாநகராட்சி நிா்வாகம் தில்லி கிராம மக்கள் மீது அதிக வீட்டு வரியை விதித்துள்ளது என்றாா் கமல்ஜீத் ஷெராவத்.

மாநகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங் கூறுகையில், ‘பாஜக மூத்த கவுன்சிலா்கள் கடந்த திங்கள்கிழமை தில்லி மேயா் ஷெல்லி ஓபராயைச் சந்தித்து, கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு வரி நோட்டீஸ்களை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மாநகராட்சியின் சிறப்பு அமா்வைக் கூட்டக் கோரியும் இரண்டு மனுக்களை அளித்துள்ளோம். ஆம் ஆத்மியின் ஆட்சியாளா்கள் மாநகராட்சியின் வருமானத்தை அதிகரித்துள்ளதாகக் கூறி தில்லி மக்களை ஏமாற்றுகிறாா்கள். இருப்பினும், ஜி20 உச்சி மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்துவதற்காக உழைத்த துப்புரவுத் தொழிலாளா்கள், தோட்டக்கலை ஊழியா்கள், பொறியாளா்கள் மற்றும் மாநகராட்சியின் பிற ஊழியா்களை இந்நேரத்தில் பாராட்ட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.