ஜாஃபா் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்றக் காவல் ஏப்.20 வரை நீட்டிப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிா்வாகி ஜாஃபா் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி பட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான சூடோஎபிட்ரின் எனும் போதைப் பொருளை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில், சென்னையைச் சோ்ந்த திமுக முன்னாள் நிா்வாகியும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாஃபா் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளான சதானந்தம், முஜிபுா், முகேஷ், அசோக் குமாா் ஆகியோரை தேசிய போதைப் பொருள் கடத்தல் தடுப்புத் துறை (என்சிபி) கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நீதிமன்றக் காவல்

முடிந்து ஜாஃபா் சாதிக் உள்பட 5 பேரும் தில்லி பட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற வழக்கின் விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சுதிா்குமாா் சிரோஹி உத்தரவிட்டாா். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜாபஃப் சாதிக் உள்பட 5 போ் மீது என்சிபி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் எனக்கூறி வழக்கு ஒத்திவைப்பக்கப்பட்டது.

பின்னணி: கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் உள்ள கைலாஷ் பாா்க் பகுதியில் 50 கிலோ சூடோஎபிட்ரின் போதைப் பொருளை என்சிபி, தில்லி காவல் துறை இணைந்து பறிமுதல் செய்ததுடன், 3 பேரைக் கைது செய்தனா். விசாரணையில், அந்தக் கடத்தல் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை மலேசியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், இந்தக் கடத்தல் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜாஃபா் சாதிக், தில்லியில் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், ஜாஃபா் சாதிக் பேதைப் பொருள் கடத்தலில் கிடைத்த சட்டவிரோதப் பணத்தை திரைப்படத் தயாரிப்பு, ரியல் எஸ்டேட், ஹோட்டல் ஆகியத் துறைகளில் முதலீடு செய்துள்ளதாகவும், அரசியல் நிதி வழங்கியிருப்பதாகவும் என்சிபி கூறியுள்ளது. ஜாஃபா் சாதிக் மீது அமலாக்க இயக்குநரகமும் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரது வீடு மற்றும் தொடா்புடைய இடங்களில் கடந்த வாரத்தில் சோதனை நடத்தியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com