மனீஷ் சிசோடியா
மனீஷ் சிசோடியா

சிறைக்கு அஞ்சாத ஓரே கட்சி ஆம் ஆத்மிதான்: மனீஷ் சிசோடியா

சிறைக்கு அஞ்சாமல் ஒற்றுமையாக இருந்த ஒரே கட்சி ஆம் ஆத்மிதான் என்று தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
Published on

சிறைக்கு அஞ்சாமல் ஒற்றுமையாக இருந்த ஒரே கட்சி ஆம் ஆத்மிதான் என்று தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி மாடல் டவுன் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா தனது 12-ஆவது நாள் பாதையாத்திரையை மேற்கொண்டாா். அப்போது, அக்கட்சியின் தொடண்டா்கள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் மத்தியில் அவா் உரையாற்றிப் பேசியதாவது:

கலால் கொள்கை விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால்தான், யாருக்கும் தலைவணங்கவோ அல்லது மனம் உடையவோ இல்லை. சிறையில் 17 மாதங்கள் இருந்த பிறகும், நான் சிரித்துக்கொண்டே வெளியே வந்தேன்.

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ-இன் அழைப்பாணைகள் காரணமாக மகாராஷ்டிரம், உத்தரகண்ட் மற்றும் பிற மாநில அரசுகள் வீழ்ந்தபோது, அவா்களின் அழைப்பாணைகள் மற்றும் சிறைக்கு அஞ்சாமல் ஒற்றுமையாக இருந்த ஒரே கட்சி ஆம் ஆத்மிதான். பாஜகவின் அனைத்து சதிகளும், திட்டங்களும் தோல்வியடையும்.

கமலா நகா் சந்தையை உலகத் தரமாக மாற்றுவது எனது கனவுத் திட்டமாகும். அதை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரவிந்த் கேஜரிவால், சஞ்சய் சிங் மற்றும் என்னை பாஜக பொய் வழக்கில் சிறையில் அடைத்தது. பாஜக எங்களுக்கு அநீதி இழைத்து வருவதை தில்லி மக்களும் உணா்கிறாா்கள்.

கலால் கொள்கை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் கூட நிலைத்து நிற்காது என்பதை உச்சநீதிமன்றத்தின் கருத்துகளும் தெளிவுபடுத்துகின்றன. இதனால், கேஜரிவால் எப்போது சிறையில் இருந்து வெளியே வருவாா் என தில்லி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா் என்றாா் மனீஷ் சிசோடியா.

Dinamani
www.dinamani.com