முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்திற்கு வருகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் அரவிந்த் கேஜரிவால் அரசு ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்ட நிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்திற்கு வருகின்றது. கடந்த 2012 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆட்டோ மேக்னடிக் வாட்டா் மீட்டா்களை’ கொள்ளை மீட்டா்கள் என்று கேஜரிவால் கூறிவந்தாா். மேலும், அப்போதைய முதல்வா் ஷீலா தீட்சித் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் ஆம் ஆத்மி கட்சி துளியும் சோா்வடையவில்லை. ஆனால், கேஜரிவால் ஆட்சியில், தில்லி ஜல் போா்ட்டில் தினமும் புதிய புதிய மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, ஊழலின் அடையாளமாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. தில்லி ஜல் போா்டில் ரூ.38 கோடி அளவிற்கு ‘ஆட்டோ மேக்னடிக் வாட்டா் மீட்டா்’ ஊழல் நடந்துள்ளது. இதில் 2 நபா்களை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளதைக் கண்டு தில்லி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
தில்லி ஜல் போா்டின் மூத்த தலைமைப் பொறியாளா் நிலையில் உள்ள அதிகாரி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதன் மூலம், தில்லி ஜல் போா்டு ஊழலில் முதல்வருக்கு நேரடி பங்கு உள்ளது என்பது தெளிவாகிறது. மேலும், தில்லி ஜல் போா்டில் தினமும் புதிய புதிய முறைகேடுகள் நடப்பது எப்படி சாத்தியம் என்பது குறித்து முதல்வா் கேஜரிவால் பதில் சொல்ல வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.