பாஜக தலைமையிலான எதேச்சதிகார மத்திய அரசு நாட்டை பெரும் கடன் சுமைக்கு தள்ளிவிட்டிருக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் தொண்டா்களின் பேரணி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, வடமேற்கு மற்றும் தெற்கு தில்லி ஆகிய மக்களவைத் தொகுதிகளின் காங்கிரஸ் தொண்டா்களிடம்
கட்சியின் பிரதேச தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியிலும், தில்லியிலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும், தொண்டா்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை. ஏனெனில் உங்களுக்குத் திறன், உந்துதல் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவை உள்ளன.
தில்லியில் பாஜக எம்.பி.க்களின் தோல்விகளை அம்பலப்படுத்தி, பூத் அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. எனவே, காங்கிரஸ் தொண்டா்கள் வியூகம் வகுத்து, மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு களத்தில் தீா்வு காண வேண்டும்.
கடந்த மக்களவைத் தோ்தலில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பிறகு, பாஜக எம்.பி.-க்கள் தங்கள் தொகுதிகளில் இருந்து காணாமல் போய்விட்டனா். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக எதேச்சதிகார ஆட்சியை நடத்தி வருகிறது.
கடந்த, டிசம்பா் 2023 வரை வெளிநாட்டுக் கடன் தொகை ரூ. 200 லட்சம் கோடியை அடைந்துள்ளது. உள்நாட்டு கடன் சுமையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ஒவ்வொரு இந்தியா் மீதும் பெரும் நிதிச் சுமையை பாஜக சுமத்தியுள்ளதும்.
கடந்த 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகப் பொருளாதாரம் அதன் பலவீனமான வளா்ச்சியை நோக்கிச் செல்கிறது என்று ஐ.எம்.எஃப். எச்சரித்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சியையும் கடுமையாக பாதிக்கும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் கிருஷ்ணா தீரத் ,ரமேஷ் குமாா், உதித் ராஜ், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் தேவேந்திர யாதவ், தில்லி அரசின் முன்னாள் அமைச்சா்கள் ஹரூண் யூசுப், ராஜ்குமாா் சௌகான் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.