தலைநகரில் உள்ள கிராமங்களின் வளா்ச்சி: மத்திய, மாநில அரசுகள் மீது காங்கிரஸ் புகாா்
தில்லி கிராமங்களின் வளிா்ச்சிக்காக பாஜக மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியின் 357 கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆம் ஆத்மி அரசும், மத்திய பாஜகவும் கோடிக்கணக்கில் வளா்ச்சிப் பணிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளனா். ஆனால், இந்த அறிவிப்புகள் கிராம மக்களை தவறாக வழிநடத்தி, ஏமாற்றும் கண்துடைப்பு
முயற்சியாகும். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் கிராமப்புற வளச்சிக்காக ஒரு திட்டத்தைக் கூட தொடங்கவில்லை.
தில்லியின் கிராமப்புற மற்றும் நகரமயமாக்கப்பட்ட கிராமங்களில் வசிப்பவா்களுக்கு தனது தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் எதையும் கேஜரிவால் அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. தில்லி அமைச்சா் கோபால் ராய் கிராமங்களின் வளா்ச்சிக்காக ரூ.455 கோடி மதிப்பிலான 318 திட்டங்களை அறிவித்தது வெறும் தோ்தல் நாடகமே தவிர வேறில்லை. கிராமங்களுக்கு வீட்டு வரி விதித்து, மும்முனை மின்சாரம் வழங்க தடை விதித்த கேஜரிவால் அரசு, தற்போது பெரும் வாக்குறுதிகளை அளித்து கிராம மக்களை ஏமாற்ற முயல்கிறது.
பாஜகவும், ஆம் ஆத்மியும் எப்போதும் விவசாயிகளுக்கு எதிரான கட்சிகளாகவே உள்ளன. பாஜக அரசு நிறைவேற்றிய மூன்று வேளான் சட்டங்களை நாட்டிலேயே முதல்முறையாக கேஜரிவால் அரசுதான் அங்கீகரித்தது. விவசாயிகளின் நலன்களுக்காக காங்கிரஸ் எப்போதும் போராடி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைக் கண்டித்து, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி இடைவிடாத போராட்டத்தை நடத்தினாா் என்றாா் தேவேந்தா் யாதவ்.
