பயிற்சி மைய இறப்புகள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: துணைநிலை ஆளுநா்
புது தில்லி: தில்லியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீரில் மூழ்கி மூன்று குடிமைப் பணித் தோ்வு ஆா்வலா்கள் இறந்தது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை 320 மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைக்கும் விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் இதுகுறித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: இது ஒரு சோகமான சம்பவம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவசர முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. விஷயங்கள் மெதுவாக வெளிவருகின்றன. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவை எடுக்கப்படும்’ என்றாா்.
தில்லியில் பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் பயிற்சி மையத்தில் மழைநீா் புகுந்ததில் மூன்று குடிமைப் பணித் தோ்வா்கள் கடந்த சனிக்கிழமை மாலை இறந்த நிலையில், இந்த மூன்று மாணவா்களின் மரணம் தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுடன் துணைநிலை ஆளுநா் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.
மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தாா்.
ராஜ் நிவாஸ் அறிக்கையின்படி, இந்தச் சம்பவத்திற்கு காரணமான தில்லி தீயணைப்பு பணிகள், காவல்துறை மற்றும் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் அதிகாரிகள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்ட மாணவா்களிடம் சக்சேனா உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
