பாஜக தலைமையகத்தை நோக்கி பேரணி: கேஜரிவால் தடுத்து நிறுத்தம்

பாஜக தலைமையகத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சியினருடன் பேரணியாகச் செல்ல முயன்ற கட்சியின் தேசிய அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
பாஜக தலைமையகத்தை நோக்கி பேரணி: கேஜரிவால் தடுத்து நிறுத்தம்
Updated on
1 min read

தில்லியில் பாஜக தலைமையகத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சியினருடன் பேரணியாகச் செல்ல முயன்ற கட்சியின் தேசிய அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால், "ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களை ஒவ்வொருவராக பாஜக கைது செய்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் அனைத்துத் தலைவர்களும் ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைமையகத்துக்கு வருகிறோம். அனைவரையும் பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் சிறையில் அடைக்கலாம்' என்றார்.

அதன்படி, புது தில்லி டி.டி.யு. மார்கில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு செல்லும் ஆர்ப்பாட்டத்தை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை ஒருங்கிணைத்தது.

பின்னர், அரவிந்த் கேஜரிவால் தலைமையில் பாஜக அலுவலகத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் புறப்பட்டனர். எனினும், முன்னெச்சரிக்கையாக டி.டி.யு. மார்கில் தில்லி காவல் துறை அறிவித்த 144 தடை உத்தரவால் முதல்வர் கேஜரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியினர் அனைவரும் போலீஸôரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து, சுமார் 15 நிமிஷங்களுக்கு அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர், போலீஸôரின் தொடர் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சித் தலைமையகத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி கவலைப்படுகிறார். ஆம் ஆத்மியை பாஜக சவாலாகப் பார்க்கிறது. எனவே, கட்சியை நசுக்கும் நடவடிக்கையை பாஜக செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

ஆம் ஆத்மி தலைவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக பொய் வழக்குகளில் பாஜக சிறையில் அடைக்கிறது. இந்த வரிசையில் எனது தனி உதவியாளர் பிபவ் குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜகவினர் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இப்போது, கலால் கொள்கையில் ஊழல் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், ஊழல் நடந்திருந்தால் அந்தப் பணம் எங்கே என்று பொதுமக்கள் கேட்கின்றனர். எங்கள் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி கைது செய்யலாம். ஆனால், எங்கள் சிந்தனையை சிறையில் அடைக்க முடியாது.

கடந்த 75 ஆண்டுகளில் செய்யாத பணிகளை தில்லியிலும், பஞ்சாபிலும் செய்துள்ளோம். சாமானியர்களின் கனவுகளை நிறைவேற்றியுள்ளோம். அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்தியுள்ளோம். இலவச மின்சாரம், இலவச குடிநீர் ஆகியவற்றைத் தொடர்ந்து, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுக்கப் போகிறோம். இதையெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com