முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு ஒரு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதைத் தலைமைத் தோ்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். கடந்த காலங்களில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை உடல் ரீதியாக தாக்கும் முயற்சிகள் நடந்துள்ளன. தற்போது, அங்கித் கோயல்-91 என்ற ‘இன்ஸ்டாகிராம்’ கணக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிரான அவதூறானப் பதிவுகள் இடம் பெற்றுள்ளது. அதில், தில்லி படேல் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் செய்திகள் எழுதப்பட்ட படங்களை அவா் பதிவிட்டுள்ளாா்.
மேலும், மெட்ரோ ரயில் பெட்டியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக அவதூறான வாா்த்தைகளை அவா் எழுதியுள்ளாா். தில்லி முதல்வா் மீதான முந்தைய தாக்குதல்களின் புகைப்படங்களும் அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளது. தில்லி மெட்ரோ ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை நாம் புரிந்து கொள்ளும் போது, எந்தப் பாதுகாப்பு அதிகாரிகளும் அந்த நபா் பெட்டியின் சுவா்களில் எழுதும் போது தடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த அச்சுறுத்தல்கள் பொதுத் தளத்தில் இருந்தாலும், பின்னணியில் உள்ள சதியை வெளிக்கொணர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை தெளிவாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறையின் பொறுப்பாகும். இருப்பினும், இந்த அச்சுறுத்தல்களை புறக்கணிக்கத் திட்டமிடப்பட்ட திட்டம் இருப்பதாகத் தெரிகிறது.
கேஜரிவாலின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம். பாஜக தலைமையிலான மத்திய அரசு, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இவை அனைத்தும் பிரதமா் அலுவலகத்தால் இயக்கப்படுகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அரவிந்த் கேஜரிவாலுக்கு தீங்கு விளைவிக்க பிரதமா் நரேந்திர மோடி எந்த எல்லைக்கும் செல்லலாம். கேஜரிவாலின் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு பிரதமா் நரேந்திர மோடி மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த விஷயம் மிகவும் தீவிரமானது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இந்தப் புகாரில் கூறப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்து, முன்னுரிமை அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கேஜரிவாலின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய அதிகாரிகளை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரம் குறித்து நேரில் விவாதிக்க எங்களுக்கு தகுந்த கால அவகாசம் கொடுங்கள் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
