தில்லியில் ஜூன் 3-இல் கருணாநிதி பிறந்தநாள் விழா: "இந்தியா' கூட்டணி தலைவர்களுக்கு திமுக அழைப்பு
புது தில்லி, மே 22: தில்லியில் ஜூன் 3-ஆம் தேதி திமுக நடத்தவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்க "இந்தியா' கூட்டணி தலைவர்களுக்கு அக்கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
இதையொட்டி, தில்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மலர் மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ஆம் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க "இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வில் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா பங்கேற்பார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர்.
அந்நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டனர். எதிர்க்கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்நிகழ்வு அமைந்திருந்தது.
இதற்கு முன்பு தில்லியில் தீனதயாள் உபாத்யாய மார்க்கில் புதிதாகக் கட்டப்பட்ட திமுக அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, கூட்டணி தலைவர்கள் அகிலேஷ், ராம்கோபால் யாதவ், ஃபரூக் அப்துல்லா, இடதுசாரி தலைவர்கள் டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

