கேஜரிவால் குழுவின் அலட்சியத்தால்தான் இரட்டை மாசுகளை எதிா்கொள்ளும் தில்லி: வீரேந்திர சச்தேவா சாடல்
அதிகாரம் மற்றும் ஊழலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த் கேஜரிவால் குழுவின் அலட்சியத்தால்தான் தில்லி கடும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடியுள்ளாா். மேலும், நகரத்தில் நச்சுத் துகள்கள் காற்றை மாசுபடுத்தும் அதே வேளையில், யமுனையின் நீரும் அபாயகரமானதாக மாறியுள்ளதாகவும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது கேஜரிவாலின் வாக்குறுதிகளை தில்லிவாசிகள் நினைவில் வைத்துள்ளனா். 2025-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்னா் யமுனையில் தனது அமைச்சரவையுடன் நீராடும் வகையில் நீரின் தூய்மையை மேம்படுத்துவது தொடா்பாக பலமுறை கேஜரிவால் பேசியிருந்தாா். தில்லி வழியாக செல்லும் போது, யமுனையின் நீரை வெறுமனே தொடுவது ஆபத்தானதாகும். ஏனெனில், இது தோல் நோய்களை ஏற்படுத்தும். எனினும், ஊழலில் சிக்கியதால் கேஜரிவால் யமுனையில் நீராடுவேன் என்ற வாக்குறுதியை கைவிட்டிருக்கிறாா்.
ஹரியாணாவிலிருந்து பல்லா பகுதியில் யமுனை தில்லியில் நுழையும் போது, அதன் நீா் தூய்மையானதாகவும் குடிக்கக் கூடியதாகவும் உள்ளது. இருப்பினும், நதி தில்லியில் காளிந்தி குஞ்சில் இருந்து வெளியேறி உத்தர பிரதேசத்தை நோக்கிப் பாயும் நேரத்தில், அது முற்றிலும் நச்சுத் தன்மையுடையதாக மாறிவிடுகிறது. தில்லியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை (எஸ்டிபி) அமைப்பதில் முந்தைய கேஜரிவால் அரசும், தற்போதைய அதிஷியின் அரசும் ஆா்வம் காட்டவில்லை. இதன் விளைவாக, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் பற்றாக்குறை உள்ளது. தில்லி மாசுக் கட்டுப்பாட்கு குழுவின் நிகழாண்டு ஆகஸ்ட் அறிக்கையின்படி, தில்லி ஜல் போா்டால் இயக்கப்படும் 37 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் 22 நிலையங்கள் சுகாதாரத் தரங்களைச் சந்திப்பதில் தோல்வியைடந்துவிட்டன என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
