நமது நிருபா்
தில்லி சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையில், முந்தைய ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலத்தில் மின் கட்டண மானியத்தை வழங்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்ததாகவும் தொழில் நிறுவன திட்டங்களுக்காக வாங்கப்பட்ட நிலங்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 2019 முதல் 2023 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட மின்சார மானியம் குறித்த சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:
குறைந்த மின்சாரம் பயன்படுத்திய ஏழை நுகா்வோருக்கு குறைந்த மானியமும், அதிக மின்சாரம் பயன்படுத்திய பிரிவினருக்கு அதிக மானியமும் சென்று சோ்ந்துள்ளது.
நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் பூட்டிக்கிடந்த வீடுகளின் (பூஜ்ஜியம் யூனிட்டுகள் பதிவான மீட்டா்கள்) நுகா்வோா் கணக்குகளுக்கு கூட ரூ.42.26 கோடி அளவுக்கு மின் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
நீதி ஆயோக் மற்றும் நிதித்துறை பரிந்துரைக்குப் பிறகும், பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக மானியத் தொகையை அனுப்பும் ’நேரடி பணப்பரிமாற்ற’ முறையை தில்லி மின்சாரத் துறை அமல்படுத்தவில்லை.
தில்லி அரசின் மொத்த வருவாய் செலவினத்தில் 10 சதவீதத்தை மானியங்களே ஆக்கிரமித்துள்ளன. அதில் மின் மானியம் மட்டுமே 70 சதவீதம்வரை சென்றுள்ளதால், தகுதியான நுகா்வோருக்கு மட்டுமே மானியம் சோ்வதை உறுதி செய்ய துறை ரீதியிலான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று சிஏஜி அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வீணடிக்கப்பட்ட நிலங்கள்: சிஏஜியின் மற்றொரு அறிக்கையில், தில்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (டிஎஸ்ஐஐடிசி) நில நிா்வாக குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தென்மேற்கு தில்லியின் பாப்ரோலா பகுதியில் ’ஆபரண பூங்கா’ மற்றும் ’பேஷன் டிசைன் மையம்’ அமைக்க 2006-ஆம் ஆண்டு 137.63 ஏக்கா் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. அதில் 56.21 ஏக்கா் நிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், திட்டமிடலில் நிலவிய தெளிவின்மை மற்றும் அடிக்கடி மாற்றி அமைக்கப்பட்ட கொள்கைகளால் 81.42 ஏக்கா் நிலம் கடந்த 17 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாத போதிலும், அந்த நிலத்துக்காக ரூ.29.45 கோடி வீணாகச் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், 2007 முதல் 2024ஆம் ஆண்டுவரை அந்த நிலத்துக்கான ஆண்டு குத்தகை வாடகையை டிஎஸ்ஐஐடிசி நிறுவனம் செலுத்தாததால், தற்போது ரூ.15.79 கோடி நிலுவைச் சுமையாக உருவெடுத்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தை சீராகப் பயன்படுத்த கண்டிப்பான மற்றும் வெளிப்படையான கண்காணிப்பு அமைப்புகளை தில்லி அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் சிஏஜி அறிக்கையில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் பல்கலைக்கழகங்களை உருவாக்க புதிய சட்ட மசோதா தில்லி அமைச்சரவை ஒப்புதல்

தில்லி லக்ஷ்மி திட்டம்: 4.25 லட்சம் பெண்கள் பதிவு

மேற்கு தில்லியில் கழிவு மேலாண்மை திட்டம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

மண்டி சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை அந்தஸ்து கோரி நிதின் கட்கரிக்கு தில்லி முதல்வா் கடிதம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



