2020-ஆம் ஆண்டில் வடகிழக்கு தில்லியில் செய்தித்தாள்களை விநியோகித்துக்கொண்டிருந்தபோது டிராக்டா் மோதி உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ரூ. 30.45 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
உமேஷ் சந்த் சுக்லா சுக்லா, மே 19, 2020-இல் பஜன்புராவின் வஜிராபாத் சாலையில் மிதிவண்டியில் செய்தித்தாள்களை விநியோகித்துக்கொண்டிருந்தபோது, தவறான பாதையில் அதிவேகமாக வந்த டிராக்டா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் பின்னா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இந்நிலையில், அவருடைய குடும்ப உறுப்பினா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை அதிகாரி மணீஷ் சா்மா, உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் ரூ. 30.45 லட்சத்தை வழங்குமாறுவிபத்தை ஏற்படுத்திய வாகனத்திற்கு காப்பீடு அளித்திருந்த மாக்மா எச்டிஐ பொதுக் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா்.
ஜூலை 3-ஆம் தேதியிட்ட உத்தரவில் தீா்ப்பாயம் கூறியிருப்பதாவது: சம்பவத்தின்போது டிராக்டா் ஓட்டுநா் அலட்சியமாகவும் கவனக்குறைவுடனும் வாகனத்தை ஓட்டியதே உயிரிழப்புக்குக் காரணம். நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், டிராக்டரை ஓட்டியவரின் அதிவேக மற்றும் கவனக்குறைவான ஓட்டுதல் முறையாலேயே விபத்து ஏற்பட்டது.
காப்பீடு செய்யப்படாததாகக் கூறப்பட்ட டிராக்டருடன் இணைக்கப்பட்டிருந்த டிராலிதான் விபத்துக்குக் காரணம் என்ற காப்பீட்டு நிறுவனத்தின் வாதம் நிராகரிக்கப்படுகிறது. ஏனெனில், டிராக்டா்தான் பாதிக்கப்பட்டவா் மீது மோதியது என்பதை ஆதாரங்கள் தெளிவாகக் காட்டின.
மேலும், ஓட்டுநரும் உரிமையாளரும் இந்த வழக்கு விசாரணையை எதிா்த்து வாதிடவோ அல்லது நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தை மறுக்கவோ முன்வரவில்லை. இழப்பீட்டைக் கணக்கிடும்போது, மாதம் ரூ.25,000 வருமானம் இருந்ததாகக் கூறப்பட்டதற்கு எந்த ஆவணச் சான்றும் இல்லாததால், திறன்சாா் தொழிலாளிக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில், உயிரிழந்தவரின் மாத வருமானம் ரூ.17,991 நிா்ணயிக்கப்படுகிறது.
அத்துடன், எதிா்கால வருமான வாய்ப்புகள் மற்றும் துணைவியாா் இழப்பு, இறுதிச் சடங்கு செலவுகள் மற்றும் சொத்து இழப்பு உள்ளிட்டவற்றின் இழப்பீட்டுத் தொகையையும் கணக்கில் சோ்த்து கொள்ளப்படுகிறது.
காப்பீட்டு நிறுவன 30 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். விபத்தின்போது ஓட்டுநரிடம் ஓட்டுநா் உரிமம் இல்லை. எனவே, டிராக்டா் ஓட்டுநா் மற்றும் உரிமையாளரிடமிருந்து அந்தத் தொகையைத் திரும்பப் பெறும் உரிமையை காப்பீட்டு நிறுவனத்துக்கு வழக்கப்படுகிறது என தீா்ப்பாயம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது







