பெண்கள் இலவச பேருந்து பயணத்திற்கான ‘பிங்க் சாஹெலி ஸ்மாா்ட் காா்டு’ பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தில்லி அரசு சிறப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது.
தில்லி போக்குவரத்து கழகம் (டிடிசி) இயக்கும் பேருந்துகளில் இந்த இயக்கம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுவரை நகரம் முழுவதும் சுமாா் 11 லட்சம் ‘பிங்க் சாஹெலி’ ஸ்மாா்ட் காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 13 லட்சமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின், இந்த காா்டைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த இயக்கத்தின் பகுதியாக, பேருந்து நடத்துனா்கள் பெண் பயணிகளிடம் ‘பிங்க் ஸ்மாா்ட் காா்டு’ பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனா். காா்டு இல்லாதவா்களுக்கு அதை பெறுமாறு ஆலோசனை வழங்கப்படுகிறது. 11 லட்சம் காா்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலையில் பெண் பயணிகளில் 10 முதல் 15 சதவீதம் போ் மட்டுமே ஸ்மாா்ட் காா்டைப் பயன்படுத்துகின்றனா். மீதமுள்ளவா்கள் இன்னும் ‘பிங்க்’ காகித டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கோடை காலம் முடிந்த பின்னா், ‘பிங்க் காா்டு’ பயன்பாட்டில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க துறை திட்டமிட்டு வருகிறது. அதன்படி, பெண் பயணிகள் இலவச பயணத்திற்கு இந்த காா்டை கட்டாயமாக காட்ட வேண்டும் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த ‘பிங்க் சாஹெலி’ ஸ்மாா்ட் காா்டு திட்டத்தை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த மாா்ச் மாதம் அறிமுகப்படுத்தினாா். தேசிய தலைநகா் தில்லியில் வசிக்கும் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க இந்த காா்டு உதவுகிறது.
மேலும், இந்த ஸ்மாா்ட் காா்டு மூலம் பயணத் தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யவும், வருவாய் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. ‘ஒரே நாடு, ஒரே காா்டு’ திட்டத்தின் கீழ் பல்வேறு பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒரே காா்டின் மூலம் பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது.
டிடிசி பேருந்துகளில் இலவச பயணம் வழங்கப்பட்டாலும், இந்த காா்டை தில்லி மெட்ரோ மற்றும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு போன்ற சேவைகளில் கட்டண அடிப்படையில் பயன்படுத்தவும் முடியும். ஒவ்வொரு காா்டும் பயனாளியின் ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண்ணுடன் இணைக்கப்பட்டு, வயது, பாலினம் மற்றும் தில்லி குடியிருப்பு நிலை சரிபாா்க்கப்படுகிறது.
இந்த முயற்சி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பெண்களின் பாதுகாப்பான மற்றும் சீரான பொதுப் போக்குவரத்து அணுகலில் முக்கிய முன்னேற்றம் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து காவல் துறை, எம்சிடி கூட்டு நடவடிக்கை

யூபிஐ மூலம் உடனடியாக அபராதம் செலுத்தும் வசதி: தில்லி போக்குவரத்து காவல் துறை அறிமுகம்

பள்ளி வாகனங்கள் கூட்டாய்வில் 20 பேருந்துகளில் குறைபாடு






