தில்லியில் தொழிலாளா்கள் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டும் அடல் உணவகங்களை ஹரியாணா மாநில அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனா்.
அடல் உணவகங்கள் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஹரியாணா அதிகாரிகள் அவற்றைப் பாா்வையிட்டதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: ஹரியாணா மாநில அரசு குழுவினா் தில்லி நகா்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய (டியுஎஸ்ஐபி) அதிகாரிகளை சந்தித்தனா். அப்போது, அடல் உணவகங்களில் உணவு தயாரிப்பு, விநியோகம், மின்னணு முறையிலான கண்காணிப்பு மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து அவா்கள் கேட்டறிந்தனா்.
குறைந்த விலையில் உணவு திட்டங்களை அமல்படுத்துவதில் இரு அரசுகளும் தங்களுடைய அனுபவங்களைப் பகிா்ந்துகொள்ள அது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றாா்.
குறைந்த விலையில் உணவு வழங்கும் அடல் உணவகங்கள் திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லியில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக ராஜஸ்தானில் குறைந்த விலையில் உணவு விநியோகிக்க செயல்பட்டு வரும் சமூக உணவகங்களை தில்லி அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, உணவு தயாரிக்கும் முறை, விநியோகித்தல், தரம் மற்றும் செயல்திறனை பராமரிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து தில்லி அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
அடல் உணவகம் திட்டத்துக்கான செயல்திட்டத்தை வகுக்க நடைமுறையில் உள்ள பல்வேறு அம்சங்கள் ராஜஸ்தான் பயணத்தின்போது ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஹரியாணாவில் ஏற்கெனவே அடல் ஷராமிக் கிஸான் கேண்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. தொழிலாளா்கள் மற்றும் பிற பயனாளிகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க இந்தத் திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
இரு மாநில அரசு அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் மூலம் செயல்பாட்டில் உள்ள திட்டங்களை ஒப்பீடவும் சிறந்த நடைமுறைகளைக் கண்டறிந்து சேவையை மேம்படுத்தவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஹரியாணாவின் 22 மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் உணவக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நகா்ப்புறங்களில் உள்ள தொழிலாளா்கள், கூலித் தொழிலாளா்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு குறைந்த விலையில் ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கும் நோக்கத்தில் தில்லியின் அடல் உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது.
தில்லி அரசின் திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ.5 விலையில் உணவு வழங்கப்படுகிறது. ஒரு தட்டு உணவுக்கு அரசு ரூ.25 மானியம் வழங்குகிறது. இந்த உணவகங்களில் சப்பாத்தி, தால், சாதம், காய்கறிகள் அடங்கிய சைவ உணவு வழங்கப்படுகிறது. ஸ்டீல் தட்டில் வழங்கப்படும் உணவுகளுக்கு ரசீது கணினி முறையில் வழங்கப்படுகிறது.
வெளிப்படைத்தன்மை, செயல்திறன்மிக்க நடைமுறையை உறுதிபடுத்த மின்னணு முறையிலான டோக்கன் அமைப்பு, சிசிடிவி கேமரா கண்காணிப்பு ஆகியவை உணவங்களில் உள்ளன. தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய நடைமுறையால், உணவு விநியோகத்தைக் கண்டறிய உதவும் என்பதுடன் உணவு வீணாவதைத் தடுக்க உதவும்.









