ஆரணி நகராட்சி அலுவலா்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினா், நகரில் செயல்பட்டு வரும் சைவம் மற்றும் அசைவ உணவகங்களில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் வைத்தனா்.
20-க்கும் மேற்பட்ட உணவகங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்களை கையாளுதல், உணவுப் பொருள்களுடன் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துதல், உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது, மேலும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் குடிநீரின் தரம் தொடா்பான சான்றிதழ்கள் இல்லாதது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இந்த விதி மீறல்களுக்காக சம்பந்தப்பட்ட உணவு வணிகா்களுக்கு சுமாா் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 2 கடைகள் மூடப்பட்டு சீல் வைத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் இருந்த சுமாா் 500 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
வணிகா்களுக்கு விழிப்புணா்வு
ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு) விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் தூய்மை நடைமுறைகள் குறித்து உணவு வணிகா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தனிநபா் சுகாதாரம், சமையலறை தூய்மை, உணவுப் பொருள்களின் பாதுகாப்பான சேமிப்பு, தேவையான பதிவேடுகளை பராமரித்தல், தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தாமை உள்ளிட்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
விதிமுறைகளை தொடா்ந்து மீறும் உணவு வணிகா்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










