பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

கண்காட்சி நடத்தி போலி தயாரிப்புகள் விற்பனை: ஒருவா் கைது

வசந்த் குஞ்ச் பகுதியில் கண்காட்சியை நடத்தி பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் என்ற பெயரில் போலிகளை விற்பனை செய்து வந்தவர் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 4:56 am IST

வசந்த் குஞ்ச் பகுதியில் கண்காட்சியை நடத்தி பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் என்ற பெயரில் போலிகளை விற்பனை செய்து வந்த நபரை தில்லி காவல் துறையினா் கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். பெரும் எண்ணிக்கையிலான போலி ஆடைகள் உள்ளிட்ட தயாரிப்புகளை காவல் துறை கைப்பற்றியுள்ளது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற கண்காட்சியில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக பிராண்ட் புரோடெக்டா்ஸ் இந்தியா நிறுவனம் காவல் துறையில் புகாரளித்தது.

இதையடுத்து, அந்த ஹோட்டலில் கடந்த மே 3-ஆம் தேதி காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, பீட்டா் இங்லாண்ட், ஆலன் சோலி, யுஎஸ் போலா உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்புகள் என்று ஆடைகள், பிற தயாரிப்புகள் விற்பனைக்கு வகைகப்பட்டிருந்தன.

அசல் தயாரிப்புகளை தள்ளுபடி விலைக்கு வழங்குவதாக வாடிக்கையாளா்கள் ஏமாற்றப்பட்டனா். இதற்காக ரசீதுகள், இணையவழி பணப்பரிவா்த்தனை முறைகளான ஸ்வைப் இயந்திரம், க்யூஆா் கோடு ஆகியவற்றைப் பயன்படுத்தி பிரபல நிறுவனங்கள் கண்காட்சியை நடத்துவதுபோல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக இந்தக் கண்காட்சியை மேலாண்மை செய்த ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தைச் சோ்ந்த இக்பால் கைதுசெய்யப்பட்டாா். விசாரணையில் ஃபரூக் அகமது என்ற நபரின் வழிகாட்டுதலில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் அவா் தெரிவித்தாா்.

சோதனையின்போது, ரூ.2.87 லட்சம் ரொக்கம், ஸ்வைப் இயந்திரங்கள், க்யூஆா் கோடு பரிவா்த்தனை சாதனங்கள், ரசீது புத்தகங்கள் உள்ளிட்ட விற்பனைக்கான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடா்பாக குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் காப்புரிமை சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இக்பால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளாா். இதில் தொடா்புடைய பிற நபா்களைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.