காற்றில் பறக்கும் நகராட்சி அறிவிப்புகள்
கடையநல்லூர், டிச. 18: அங்கீகாரமற்ற பகுதிகளில் வீடு கட்ட வேண்டாம் என பொதுநலன் கருதி நகராட்சி சார்பில் அறிவிப்புகளும், விளம்பரங்களும் தொடர்ந்து வெளிவந்தாலும் கூட, பொதுமக்கள் அதுகுறித்து கண்டுகொள்ளாத நில


கடையநல்லூர், டிச. 18: அங்கீகாரமற்ற பகுதிகளில் வீடு கட்ட வேண்டாம் என பொதுநலன் கருதி நகராட்சி சார்பில் அறிவிப்புகளும், விளம்பரங்களும் தொடர்ந்து வெளிவந்தாலும் கூட, பொதுமக்கள் அதுகுறித்து கண்டுகொள்ளாத நிலையே கடையநல்லூர் பகுதியில் நீடித்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட முதல் நிலை நகராட்சி, கடையநல்லூர் நகராட்சி.
52.25 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்நகராட்சியில் தற்போது சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகராட்சியில் 216 தெருக்கள் உள்ளன. இவற்றின் மொத்த நீளம் சுமார் 52.33 கி.மீ. ஆகும்.
கடையநல்லூர் நகரப் பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளில் சென்று பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊரிலேயே வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர்.
ஆனால் நகரப் பகுதிக்குள் இடம் இல்லாத நிலையில் கடையநல்லூர் நகரத்தின் வெளிப்புறத்தில் நகராட்சியால் அங்கீகாரம் வழங்கப்படாத மனைகளை வாங்கி வருகின்றனர்.
இதனால் கடையநல்லூர் நகராட்சியின் வெளிப்புற பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.
கடையநல்லூர் நகராட்சியைப் பொருத்தவரை ஆயிரக்கணக்கான வீடுகள் முறையாக அங்கீகாரம் பெறாத பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. முறையாக அங்கீகாரம் பெறாமல் உள்ள இப்பகுதிகளுக்கு நகராட்சி மூலம் எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்ய இயலாத நிலையே நீடித்துவருகிறது.
இந்நிலையில், இதுபோல அங்கீகாரமற்ற மனைப்பகுதிகளில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வீடு கட்டி வசிக்கும் மக்கள், தங்கள் பகுதிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால், தெருக்களின் அகலம் குறிப்பிட்ட அளவு இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களால் அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் குடிநீர், வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.
இதன் காரணமாக நகராட்சி, அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளில் வீடுகள் கட்ட வேண்டாம். அப்படி கட்டினால், அடிப்படை வசதிகளை நகராட்சியால் செய்து தர முடியாது என்று தொடர்ந்து அறிவித்து வருகிறது.
ஆனால் இந்த அறிவிப்புகளை இப்பகுதி மக்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து அங்கீகாரமற்ற பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்பதுதான் வேதனை தரும் விஷயம்.
எனவே, நகராட்சி நிர்வாகம், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல கட்டப் பிரசாரங்களைச் செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...