குற்றாலத்தில் | 5.92 கோடியில் இயற்கை சூழலில் "அருவிப் பூங்கா'

திருநெல்வேலி, செப். 17: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க | 5.92 கோடி செலவில் இயற்கை சூழலுடன் கூடிய "அருவிப் பூங்கா' அமைக்கப்பட உள்ளது.  உதகை, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலை வாசஸ்தலங்
Updated on
2 min read

திருநெல்வேலி, செப். 17: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க | 5.92 கோடி செலவில் இயற்கை சூழலுடன் கூடிய "அருவிப் பூங்கா' அமைக்கப்பட உள்ளது.

 உதகை, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலை வாசஸ்தலங்களில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா போன்று இங்கும் ஏராளமான மரம், செடி, கொடிகளை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

 மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குற்றாலத்தில் தென் மேற்குப் பருவ மழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அருவிகளில் தண்ணீர் கொட்டும். இதில் குளித்து மகிழுவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் லட்சக்கணக்கில் இங்கு வந்து செல்வது வழக்கம்.

 குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு அருவியும், கோயில்களும் தவிர வேறு பொழுதுபோக்கு இடங்கள் ஏதுவும் கிடையாது. சீசன் காலத்தில் ஒரு வாரம் சாரல் விழா மட்டுமே நடத்தப்படும். குற்றாலத்தில் உள்ள சிறிய பூங்காக்கள் கூட முறையாக பராமரிக்கப்படாததால் அவை சுற்றுலாப் பயணிகளை கவருவதில்லை.

 உதகை, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் உள்ள இயற்கை சூழலுடன் கூடிய பூங்காக்களில் மரம், செடி, கொடிகள், அரிய விலங்கினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதுமாதிரியான ஒரு இடம் குற்றாலத்தில் இல்லை என்பது சுற்றுலாப் பயணிகளுக்கு பெருங்குறையாக இருந்தது வந்தது.

 தமிழ்நாட்டில் பூங்காக்களையும், தோட்டங்களையும் உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் குற்றாலத்தில் உள்ள அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையில் அழகிய இயற்கை சூழலுடன் கூடிய "அருவிப் பூங்கா' 36.78 ஏக்கரில் |5.92 கோடி செலவில் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின்போது வேளாண்மை துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

 குற்றாலம் ஐந்தருவிக்கு அருகே சுமார் 36.78 ஏக்கரில் அரசு தோட்டக்கலைத் துறை பண்ணை அமைந்துள்ளது. இதில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையினர் பழம் தரும் மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர். அரசின் திட்டங்களுக்கும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவும் இவை அங்கு வளர்க்கப்படுகின்றன. எஞ்சியுள்ள 26 ஏக்கரில் ஆங்காங்கே பழ மரங்களும், காட்டு மரங்களும், இதர செடி, கொடி, தாவரங்களும் உள்ளன. பழத்தோட்ட அருவியும் இந்த பண்ணைக்கு அருகில்தான் உள்ளது. அரசு அறிவித்துள்ள "அருவிப் பூங்கா'வை அமைக்க இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு தோட்டக்கலைத் துறையின் பழ மரக்கன்று நாற்றங்கால் உள்ள 10 ஏக்கர் தவிர இதர 26 ஏக்கரில் பயன்தராத மரம், செடி, கொடிகள் அகற்றப்பட்டு "அருவிப் பூங்கா'வை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்த "அருவிப் பூங்கா' திட்டத்திற்கான இயற்கை நிலக்காட்சி (லேண்ட் ஸ்கேப்) வரைபடத்தை சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. அதன்படி அரிய மரங்கள், வண்ண மலர்ச் செடிகள், அழகிய கண்ணைக் கவரும் கொடி வகை செடிகள் வளர்க்கப்படுவதோடு மேடு, பள்ளங்களும், புல்வெளிகளும், நீரோடைகளும் அமைக்கப்படும். பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காலார நடந்து செல்லும் வகையில் நடைபாதைகளும் அமைக்கப்பட உள்ளன. நடந்து செல்லும்போது மரம், செடி, கொடிகளை பார்த்துவிட்டு அங்குள்ள பழத்தோட்ட அருவியையும் பார்த்து செல்லும் வகையில் அந்த நிலக்காட்சி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கும் திட்டம் இல்லை. பூங்காவில் குழந்தைகளை கவரும் வகையில் விலங்கினங்களையும் காட்சிக்கு வைக்கும் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது.

 இந்த "அருவிப் பூங்கா' திட்டத்திற்கு இம் மாதம் 21-ம் தேதி மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்தப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு ஒன்றிரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது. பூங்காவை மேம்படுத்த தேவையின் அடிப்படையில் தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

 தமிழ்நாட்டில் பூங்காக்களையும், தோட்டங்களையும் உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தில் குற்றாலம் "அருவிப் பூங்கா' மட்டுமின்றி ஏற்காட்டில் |7.36 கோடி செலவில் 36 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய தாவரவியல் பூங்கா அமைத்தல், |3.34 கோடி செலவில் 11.25 ஏக்கரில் ஏற்கெனவே உள்ள அண்ணா பூங்காவை மேம்படுத்துதல், சென்னை மாதவரத்தில் |5.93 கோடியில் 28.16 ஏக்கரில் அலங்கார மற்றும் மாதிரி தோட்டம் அமைத்தல், கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, அண்ணா பூங்காவை |1.59 கோடியில் மேம்படுத்துதல், உதகை அரசு பூங்காவில் |1.50 கோடியில் மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களும் அடங்கும். இதில் மாதவரம் பூங்கா பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

 குற்றாலத்தில் நடைபெறும் விழாவில், "அருவிப் பூங்கா' பணிக்கும், கொடைக்கானல் பூங்காக்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதர பூங்கா பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com