தூத்துக்குடி, அக். 8: முதல் தேர்தலைச் சந்திக்கும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. களத்தில் 12 வேட்பாளர்கள் 5 முனைப் போட்டியே அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.
1866-ம் ஆண்டு 5 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட தூத்துக்குடி நகரசபை 2008 ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழகத்தின் 10-வது மாநகராட்சியாக உதயமானது. இதையடுத்து, நகர்மன்றத் தலைவராக இருந்த இரா. கஸ்தூரி தங்கம் மேயரானார். 51 வார்டு உறுப்பினர்களும் மாமன்ற உறுப்பினர்களாகினர்.
இம் மாநகராட்சியையொட்டியுள்ள 5 கிராம ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியின் எல்லை விரிவுபடுத்தப்பட்டது. வார்டுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்பட்டது.
மாநகராட்சி அந்தஸ்து பெற்ற பின், முதல் தேர்தலை இம் மாநகராட்சி இம் மாதம் 17-ம்
தேதி சந்திக்கிறது. தேர்தல் மூலம் மேயரை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான முதல் தேர்தல் இது என்பதால், மேயர் பதவியைக் கைப்பற்ற கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மேயர் பதவிக்கு, அதிமுக சார்பில் எல். சசிகலா புஷ்பா, திமுக சார்பில் எம். பொன் இனிதா, காங்கிரஸ் சார்பில் சிந்தியா வயலட் லில்லி, தேமுதிக சார்பில் எஸ். ராஜேஸ்வரி, மதிமுக சார்பில் பேராசிரியை பாத்திமா பாபு போட்டியிடுகின்றனர்.
பாமக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன. எனினும் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக ஆகிய 5 கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி உள்ளது.
அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பாவுக்கு ஆளும்கட்சி வேட்பாளர் என்பது மிகப்பெரிய பலம்.
உள்ளாட்சிப் பதவிகளிலும் ஆளும் கட்சியினர் வெற்றிபெற்றால்தான் திட்டங்கள் அதிகம் கிடைக்கும் என்ற பொதுவான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது.
அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், சி.த. செல்லப்பாண்டியன் ஆகியோர் மும்முரப் பிரசாரத்தில் உள்ளனர். அதிமுக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தனக்கு வெற்றிவாய்ப்பைத் தேடித் தரும் என அவர் உறுதியாக நம்புகிறார்.
அதேநேரம், வெளியூர் வேட்பாளர் என்ற குற்றச்சாட்டு, கட்சி நிர்வாகிகளிடையே நிலவும் கோஷ்டி பூசல் போன்றவை அவருக்குப் பாதகமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன.
திமுக வேட்பாளர் பொன் இனிதாவைப் பொறுத்தவரை, திமுக பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது சாதகமான விஷயம். முந்தைய திமுக ஆட்சியில் மாநகராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம், பக்கிள் ஓடை சீரமைப்பு போன்ற பணிகள் அவருக்கு வலுசேர்க்கும் என அக் கட்சியினர் கூறுகின்றனர்.
எனினும், இத் திட்டப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாததையும், 5 ஆண்டுகளில் மாநகராட்சியில் பெரியளவில் அடிப்படை வசதிகள் செய்யாததையும் திமுகவுக்கு எதிரான அம்சங்களாக மக்கள் கருதுகின்றனர்.
அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு சவால் விடும் வகையில், மதிமுக வேட்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு மக்களிடையே பிரபலமானவராக உள்ளார். மேயர் பதவிக்கு களத்தில் இருக்கும் 12 வேட்பாளர்களில் மக்களுக்குத் தெரிந்த முகம் பாத்திமா பாபு மட்டுமே.
மக்கள் பிரச்னைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியவர். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், மீனவ வாக்குகள் பெரும்பாலானவை இவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், நடுநிலை வாக்காளர்களின் வாக்குகளும் இவருக்கே கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இவருக்கு கிடைக்கும் வாக்குகள் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு பெரும் சவாலாக அமையும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து.
காங்கிரஸ் வேட்பாளர் சிந்தியா வயலட் லில்லி அரசியலுக்குப் புதியவர். கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதால், மக்கள் தங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவர் என்பது அக் கட்சி நிர்வாகிகளின் நம்பிக்கை. மற்ற மாவட்டங்களைப்போல தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் கிடையாது.
தங்கபாலு, வாசன், இளங்கோவன் என அனைவரின் ஆதரவாளர்களும் ஓரணியில் திரண்டு தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பது இவருக்கு மிகப்பெரிய பலம்.
தூத்துக்குடியில் தேமுதிகவுக்கும் கணிசமான வாக்குவங்கி உள்ளது. அக் கட்சி சார்பில்
எஸ். ராஜேஸ்வரி போட்டியிடுகிறார்.
2006 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோதே, அக் கட்சி வேட்பாளர் தூத்துக்குடி தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றார். இம்முறை கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு, விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரின் பிரசாரம் ஆகியவை தங்களுக்குச் சாதகமாக அமையும் என அக் கட்சியினர் நம்புகின்றனர்.
மொத்தத்தில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு 5 முனைப்போட்டி நிலவுகிறது. மகுடம் சூடப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு மக்கள் கையில்தான் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வே தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பல்!

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க! தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


