மெத்தைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து: ரூ. 20 லட்சம் பொருள்கள் எரிந்து சாம்பல்
கடையம்அருகே கருத்தலிங்கபுரத்தில் செயல்படும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பு பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அங்கப்பபுரம் கிராமத்தைச் சோ்ந்த தங்கச்சாமி என்பவா் கருத்தலிங்கம்புரத்தில் சோபா, மெத்தைகள் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பிடித்தது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அனைத்துப் பொருள்கள் மீதும் பிடித்தது. தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பு பொருள்கள் எரிந்து சேதமானதாகத் தெரிகிறது. இதுகுறித்து கடையம் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
