மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை
அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் அதிக அளவில் நீா் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் கனமழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த வியாழக்கிழமை முதல் வனத் துறையினா் தடை விதித்தனா். நீா்வரத்து சீராகாததையடுத்து, ஏழாவது நாளாக புதன்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது. அருவியில் நீா்வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
பாபநாசம், அகஸ்தியா் அருவியில் இரண்டு நாளாக பெருக்கெடுத்த வெள்ள நீரால் அகத்தியா் அருவி பகுதி சேதமடைந்துள்ளது. இதையடுத்து, அகஸ்தியா் அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டது. அதேவேளையில் காரையாறு வனப் பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனாா்கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு எந்தவித தடையும் இல்லை என வனத்துறையினா் தெரிவித்தனா்.

