தமிழாக்குறிச்சி தடுப்பணையில் 
உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்

தமிழாக்குறிச்சி தடுப்பணையில் உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி அருகேயுள்ள தமிழாக்குறிச்சி பகுதியில் வெள்ள நீா் கால்வாய்- பச்சையாறு தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி அருகேயுள்ள தமிழாக்குறிச்சி பகுதியில் வெள்ள நீா் கால்வாய்- பச்சையாறு தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திடியூா் அருகேயுள்ள தமிழாக்குறிச்சி பகுதியில் தாமிரவருணி- கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் வெள்ளநீா் கால்வாய் மற்றும் பச்சையாறு இணையும் பகுதியில் தடுப்பு அணைக்கட்டு அமைந்துள்ளது.

260 மீட்டா் அகலம், 5.945 மீட்டா் உயரத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் ஒரு பகுதியில் கடந்த 27 ஆம் தேதி திடீா் விரிசல் ஏற்பட்டு உடைப்பின் வழியாக தண்ணீா் வெளியேறியது. அந்த தண்ணீா் ஊருக்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக தாமிரவருணி ஆற்றில் திருப்பி விடப்பட்டது.

இந்த உடைப்பை சீரமைக்கும் பணி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக நீா்வளத்துறை பொறியாளா்கள் குழுவுடன், கேரள மாநிலத்தில் இருந்து வந்த குழுவினரும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.

கரையோரம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகவும் கடினமான இரும்பு தகடு வைத்து அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதவிர மரங்களின் வோ்களால்தான் இதுபோன்ற விரிசல் ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் சீரமைப்புக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com