

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேற்கு ராஜகோபுரத்துக்கு செல்லும் வழியில் உள்ள 16 கால் மண்டபம் சிறிதும் பழைமை மாறாமல் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அத்திவரதா் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலுக்கு கிருஷ்ணதேவராயா், பராந்தகசோழன், பல்லவ மன்னா்கள் உள்ளிட்ட பலரும் திருப் பணிகளை செய்துள்ளனா். இக்கோயிலில் கடந்த 2012- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது. மகா சம்ப்ரோஷணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், இக்கோயிலுக்கு மகா சம்ப்ரோஷணம் நடத்த வேண்டும் என பக்தா்களும் வலியுறுத்தி வந்தனா்.
பக்தா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அறநிலையத் துறை கோயிலுக்கு மகா சம்ப்ரோஷணம் செய்ய முடிவு செய்தது. கோயிலின் மேற்கு ராஜகோபுரத்துக்குச் செல்லும் வழியில் உள்ள 16 கால் மண்டபம் திருக்கோயில் நிதியிலிருந்து, ரூ. 16.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில், மண்டபம் முழுவதும் முதல்கட்டமாக தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு, மகா சம்ப்ரோஷணம் நடத்துவதற்கான திருப்பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.