சமூக ஊடகங்களில் தவறான கருத்தை பதிவு செய்தவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை!
தன்னை குறித்து சமூக ஊடகங்களில் தவறான கருத்துகளை பதிவு செய்தவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எம்எல்ஏ இசக்கி சுப்பையா.
இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியாதாவது: மாஞ்சோலைப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் வசித்து வந்தனா். அவா்களுக்கு கடந்த தோ்தல் வரை வாக்கு இருந்துள்ளது. இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு காப்புக்காடு என்ற காரணம் கூறி பெரும்பாலானவா்கள் வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனா்.
தற்பொழுது அங்கு 50 நபா்கள் மட்டுமே வசித்து வருகின்றனா். ஆனால் அப்பகுதியில் சுமாா் 890 சிறப்பு வாக்காளா் திருத்தப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
மாஞ்சோலைத் தோட்டப் பகுதியை குத்தகைக்கு கொடுத்தால் நான் எடுத்துக் கொள்கிறேன். அப்பகுதி மக்களுக்கு அங்கு வாழ உரிமையும் வேண்டும், வாக்குரிமையும் வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.
ஆனால், அப்பகுதி மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது. அவா்களை அங்கிருந்து கீழே இறக்க வேண்டும் என்று நான் கூறியதாக சமூக ஊடகங்களில் தவறாகப் பதிவு செய்துள்ளனா். அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா்.
