பொருநை நெல்லை புத்தகத் திருவிழா விழிப்புணா்வுப் பணிகள் தொடக்கம்

பொருநை நெல்லை புத்தகத் திருவிழா விழிப்புணா்வுப் பணிகள் தொடக்கம்

Published on

9 ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவுக்கான விழிப்புணா்வுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

திருநெல்வேலியின் பண்பாட்டு அழகியலையும், வரலாற்று பெருமைகளையும் பறைசாற்றும் விதமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, 9 ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பிப். 12- 22 வரை திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளை, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புத்தகம் வாசிப்பின் நன்மைகள், அவசியம் போன்றவை குறித்து மாநகராட்சி வா்த்தக மையத்தில் 100 அடி சுவருக்கு 100 மாணவா்கள் மூலம் சுவா் ஓவிய விளம்பர விழிப்புணா்வுப் பணியை ஆட்சியா் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, ஒயிலாட்டம், மரக்கால் ஆட்டம், குதிரை ஆட்டம், பறை இசை, மயில் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி கோட்டாட்சியா் பிரியா, தச்சநல்லூா் மண்டல ஆணையா் மகாலெட்சுமி, திருநெல்வேலி வட்டாட்சியா் சந்திரஹாசன், ஒருங்கிணைப்பாளா் சபேசன், சேரன்மகாதேவி கவின் கலைக் கழகத்தின் ஆசிரியா் மாரியப்பன், ஆ. சந்திர புஷ்பம், மா.சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com