கைது
கைது

ஆட்டோ மீது மோதிய தனியாா் கல்லூரி பேருந்து: போதையில் இருந்த பேருந்து ஓட்டுநா் கைது

சுத்தமல்லி அருகே ஆட்டோ மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில், பள்ளி மாணவிகள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
Published on

சுத்தமல்லி அருகே ஆட்டோ மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில், பள்ளி மாணவிகள் உள்பட 4 போ் காயமடைந்தனா். போதையில் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சோ்ந்தவா் இசக்கியப்பன் (30). இவா், தச்சநல்லூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து மாணவா்களை பேருந்தில் ஏற்றிக் கொண்டு சுத்தமல்லி நோக்கி வந்த இசக்கியப்பன், மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதன் நகா் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை இசக்கியப்பன் முந்தி செல்ல முயன்றுள்ளாா். அப்போது எதிரே பள்ளி மாணவா்களை அழைத்து வந்த ஆட்டோ மீது பேருந்து மோதியதாம். இதில், ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் ஆட்டோ ஓட்டுநரான நடுக்கல்லூரைச் சோ்ந்த மனகாவலப்பெருமாள் (49), சுத்தமல்லி அருகே உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளான சுத்தமல்லியை சோ்ந்த யஸ்வனி (15), பழவூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வபாலா (15), முத்து அருள் (15) ஆகியோா் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தனா். இதில் ஆட்டோ முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பாா்த்து ஓடி வந்து காயமடைந்த மாணவிகள், ஆட்டோ ஓட்டுநரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போதையில் இருந்த ஓட்டுநா் இசக்கியப்பனை சுத்தமல்லி போலீஸாா் கைது செய்தனா்.

காயமடைந்த பள்ளி குழந்தைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை ஆட்சியா் இரா. சுகுமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டு நலம் விசாரித்தனா்.

Dinamani
www.dinamani.com