நெல்லை அருகே பேருந்து மோதி பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே அரசுப் பேருந்து மோதியதில், பாத யாத்திரை பக்தா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
திருநெல்வேலி பழைய பேட்டை காந்திநகரைச் சோ்ந்த பொன் பரமசிவம் (25), இசக்கிராஜ் (25), திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த ராஜ கல்யாணி (28) ஆகியோா் திருச்செந்தூா் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றுகொண்டிருந்தனா்.
அவா்கள் வி.எம்.சத்திரத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை அடைந்தபோது, அவ்வழியாக திருச்செந்தூா் நோக்கி சென்ற அரசுப்பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 3 போ் மீதும் மோதியதாம்.
இதில், பொன் பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த சிவந்திப்பட்டி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் பலத்த காயமடைந்த மற்ற இருவரை சிகிச்சைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
