ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகக் கிடக்கும் குடிநீர்க் குழாய்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 9 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் அழகியபாண்டியபுரம்-களியல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 109.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2016இல் பணிகள் தொடங்கப்பட்டன.
இத்திட்டத்தில் 30 சதவீத பணிகள் நிறைவடைந்திருந்த நிலையில், களியல் பகுதியில் கோதையாற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இத்திட்டப்பணிக்காக கொண்டு வரப்பட்டு சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள குழாய்கள் தற்போது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன.
குறிப்பாக சுருளகோடு, பொன்மனை, குலசேகரம், உண்ணியூர்கோணம், பிணந்தோடு ஆகிய இடங்களில் சாலையோரங்களில் கிடக்கும் குழாய்களால் சாலையில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குலசேகரம் அருகே செறுதிக்கோணம் பகுதியில் கிடக்கும் குழாய்களால் அப்பகுதி வழியாக நடந்துசெல்லும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.