விநாயகர் சதுர்த்தி நன்கொடை கேட்டு கல்லூரி முதல்வரை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலில் சிஎஸ்ஐ பேராயத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் கல்லூரி ஒன்று வடசேரியில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்குள் வியாழக்கிழமை காரில் சென்ற இந்து அமைப்பு நிர்வாகிகள் சிலர் கல்லூரி முதல்வரிடம் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அங்கிருந்தவர்களுக்கும், இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கல்லூரி முதல்வரை அவதூறாக பேசியதுடன் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுசீலா வடசேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் குழித்துறை இந்து சேனா மாவட்டத் தலைவர் பிரதீப்குமார்(40), சிதறாலைச் சேர்ந்த பிரதீஸ்(36), பாகோடு கழுவன் திட்டையைச் சேர்ந்த மூர்த்தி (50)ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் பிரதீஸை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.