கொச்சுவேலி - தூத்துக்குடி இடையே ரயில் இயக்க வலியுறுத்தல்
திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கொச்சுவேலியிலிருந்து தூத்துக்குடிக்கு ரயில் இயக்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அந்தச் சங்கம் சாா்பில் அனுப்பப்பட்ட மனு: திருநெல்வேலியிலிந்து கொல்லம் வழியாக பாலக்காடு செல்லும் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, கொல்லம் மாவட்டங்களைச் சோ்ந்தோா் துறைமுக நகரமான தூத்துக்குடி செல்ல நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளது.
ஆனால், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் தென்பகுதி மக்களுக்கு தூத்துக்குடி செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. எனவே, கொச்சுவேலியிலிருந்து நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து, ‘கொச்சுவேலி - தூத்துக்குடி’ என இயக்கலாம்.
மேலும், ரயில்வே துறை 200 கி.மீ. தொலைவுக்கு மேல் இயங்கும் பயணிகள் ரயில்களை விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கி வருகிறது. கொச்சுவேலி-தூத்துக்குடிக்கு இடையேயான தொலைவு 208.5 கி.மீ. ஆகும். எனவே, இந்தத் தடத்தில் ரயிலை இயக்கும்போது விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
